பி.இ அரியர் தேர்வுகளை ரத்து செய்தது ஏற்க முடியாது - ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது
அரியர் மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி அளித்தால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஏஐசிடிஇ எழுதிய கடிதத்தினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வெளியிட்டுள்ளார்.
சென்னை: பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது. இருப்பினும், அரியர் தேர்வை ரத்து செய்யும் அரசின் முடிவில் எந்த மாற்றமில்லை என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார். அதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை என்று அமைச்சர் அன்பழகன் கூறிய நிலையில் அந்த கடிதத்தினை தற்போது துணைவேந்தர் சூரப்பா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இதனால் பல ஆண்டுகளாக அரியர் தேர்வுகளை எழுதி வந்த லட்சக்கணக்கான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி போஸ்டர், பேனர் என அமர்களப்படுத்தினர். கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களின் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்த முடிவினை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் கூறி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டது.
அந்த கடிதத்தில் எந்தவொரு தேர்வையும் நடத்தாமல் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல. இதுபோன்ற மாணவர்கள் தொழில்துறையாலும், உயர்கல்வி சேர்க்கையின் போது பிற பல்கலைக்கழகத்தாலும் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறியிருக்கிறார்.

இது அரியர் ரத்து செய்யப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த செய்தியை உயர்க்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் மறுத்தார். அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் கருத்துக்கு பதில் தரும் விதமாக பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பி.இ மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் கடிதம் எழுதியது உண்மையே என்று கூறினார். அமைச்சர் அன்பழகனும் துணைவேந்தர் சூரப்பாவும் மாறி மாறி வேறு வேறு கருத்துக்களை கூறியது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏஐசிடிஇ எழுதியிருக்கும் இமெயில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications