ஆறுமுகம் சாமி ஆணையத்திடம் அவகாசம் கேட்ட எய்ம்ஸ் குழு - விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகுமா?
சென்னை: ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை குறித்த இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளதால் ஆணையத்தின் விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார்.
இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது. ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ஆம் முதல் விசாரணையைத் தொடங்கியது.

சசிகலா பிராமணப்பத்திரம்
போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர். சசிகலா சிறையில் இருந்ததால் அவரது தரப்பில் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவை கைத்தாங்கலாக படுக்கைக்கு கொண்டுவர தான் உதவியதாகவும், படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மார்ச் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார். பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவக்குழு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவுகின்ற வகையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவின்படி ஆறு பேர் கொண்ட மருத்துவ குழுவை நியமித்திருந்தது எய்ம்ஸ். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.

அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம்
இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்களது இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதாக ஆறுமுக சாமி ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறது எய்ம்ஸ் மருத்துவக் குழு. இது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ குழு அனுப்பி இருக்கும் விபரத்தில், ஆணைய விசாரணையில் இடம்பெற்று இருக்கும் மருத்துவர்கள் வெளிநாடு சென்று இருக்கிறார்கள். ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு தான் அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள். அதனால் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் இந்த அவகாசத்தால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications