“கூட்ட நெரிசலுக்கு தனி மனிதர் பொறுப்பு அல்ல”.. அஜித் கருத்துக்கு விஜய் தரப்பு ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: "கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரு தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. எல்லோரும் அதற்கு பொறுப்பு." என நடிகர் அஜித் குமார் கூறிய நிலையில், தவெக கட்சியினர், அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ஆதரவாக அஜித் கருத்து தெரிவித்திருப்பதாக தவெகவினர் கூறி வருகின்றனர்.
தவெக மதுரை தெற்கு தொகுதி ஐடி விங் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "அஜித் அரசியல் பேசாமல் இருக்கும்போது அவரை வைத்து நீங்கள் பேசிய அரசியலை இன்று அவர் பேசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடியவரை அரசியலில் இழுத்து பேசக்கூடிய அணுகுமுறையை இனியாவது திருத்திக் கொள்வது நலம். ஏனென்றால் அவர் அரசியல் பேச ஆரம்பித்தால் நீங்கள் உருவாக்கிய பிம்பம் சுக்கு நூறாகும். நன்றி AK" எனத் தெரிவித்துள்ளனர்.

தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், "திமுக மீதான நேரடி தாக்குதல்" எனப் பதிவிட்டுள்ளார். தவெக மாணவர் அணி வட சென்னை தெற்கு துணை அமைப்பாளர் பிரேம்குமார் மூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், "இந்த துயரமான நேரத்தில் தமிழக மக்களுக்கு நீங்கள் அளித்த குரலுக்கு தவெக மாணவர் பிரிவு சார்பாக எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் வார்த்தைகள் ஒரு நடிகராக அல்ல, மாறாக ஒரு இரக்கமுள்ள மூத்த சகோதரராக, சமீபத்திய கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, தவறு ஒரு தனி நபரிடம் மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளதை நினைவூட்டுகின்றன. நீங்கள் ஒரு வேதனையான உண்மையைப் பேசினீர்கள், கூட்ட வெறியைக் காட்ட இடைவிடாத அழுத்தத்தால் தூண்டப்பட்ட நமது சமூகம், ஒரு மனித வாழ்க்கையின் மதிப்பை மறந்துவிட்டது.
ரசிகர் போட்டிகளைக் கடந்து செல்லும் ஒரு தருணம் இது. எண்கள் மற்றும் சத்தம் மீதான வெறி குழப்பத்தையும் இதயத்தை நொறுக்கும் இழப்பையும் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம். கூட்டுப் பொறுப்பிற்கான உங்கள் அழைப்பு எங்கள் இதயங்களில் ஆழமாக பிரதிபலிக்கிறது. தீவிர ரசிகர்களாக இருப்பதற்கு முன்பு ஒழுக்கமான, பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பது நமது முதன்மைக் கடமை என்பதற்கான நினைவூட்டல் இது.
தவெக மாணவர் அணி உறுப்பினர்களாகிய நாங்கள், இந்தச் செய்தியை உள்வாங்குவதாக உறுதியளிக்கிறோம். மனிதநேயமும் பாதுகாப்பும் எப்போதும் முதன்மையானவை என்பதை உறுதி செய்ய நாங்கள் பாடுபடுவோம். உங்கள் கருத்து, ஒரு சோக தருணத்தை கூட்டுத் தீர்மானத்தின் தருணமாக மாற்ற எங்களுக்கு உதவியுள்ளது. உங்கள் அமைதியான வலிமையுடனும், ஆழ்ந்த முதிர்ச்சியுடனும் எங்களுக்குப் பாதையைக் காட்டியதற்கு நன்றி, ஏ.கே." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ajith on karur incident: ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நடிகர் அஜித் குமார் அளித்த பேட்டியில், "கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு பொறுப்பு அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.
கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூட கூட்டம் வருகிறது. ஆனால் அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லை. இது ஏன் தியேட்டர்களில் மட்டும் நடக்கிறது? பிரபலங்கள், திரைக் கலைஞர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இது மோசமாக சித்தரிக்கிறது.
எங்களுக்கு அந்த அன்பு தேவைதான். அதற்காகத்தான் கடுமையாக உழைக்கிறோம். குடும்பத்தை விட்டு பிரிந்து, நீண்டநேரம் படப்பிடிப்பு தளங்களில் இருக்கிறோம், ஒரு படத்தை உருவாக்க காயங்களை அனுபவிக்கிறோம், மன அழுத்தம், தூக்கமில்லாத இரவுகளை கடக்கிறோம். இவை அனைத்தும் எதற்காக? மக்களின் அன்புக்காகத்தான். ஆனால் அந்த அன்பைக் காட்ட வேறு வழிகள் உள்ளன. ஊடகங்கள் முதல்நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்க கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications