மக்களிடம் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்.. போலீஸாருக்கு ஆணையர் விஸ்வநாதன் உருக்கமான கடிதம்
சென்னை: மக்களிடம் பொறுப்புணர்வுடனும் கடமையுணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் காவலர்களுக்கு கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று முன் தினம் நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் காவலர்களுக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல் துறையினருடைய சிறப்பான பங்களிப்பு மூலம் சென்னை பொதுமக்கள் நம் மீது ஒரு மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
அதற்கு காவல் ஆளினர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தங்களுடைய உழைப்பையும் திறமையையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். குறிப்பாக சிசிடிவி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியன் மூலம் இந்தியாவிலேயே சென்னையை பாதுகாப்பான நகரமாக உருவாக்கியதற்கு நீங்கள் சிந்திய வியர்வையை நான் இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
நம்மை நாடி வருகிற மனுதாரர்களை மற்றவர்கள் எவ்வாறு நம்மை நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அது போன்றே நாமும் மற்றவர்களை நடத்த வேண்டுமென்ற அறிவுரைக்கிணங்க நீங்கள் ஒவ்வொருவரும் நடந்து கொண்ட விதத்தால் காவல் துறைக்கு பொதுமக்களிடமிருந்த அன்பும், நன்மதிப்பும் பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை நாம் அறிவோம்.
தீபாவளி, பொங்கல் விழா மற்றும் சர்வதேச மகளிர் தினம் போன்ற விழாக்களை காவலர் குடும்பத்துடன் கொண்டாடிய நாட்கள் என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். சவாலான பல்வேறு சூழ்நிலையிலும் கொரோனா காலத்திலும் நீங்கள் முதல் வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
சீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன்.. டிரம்ப் கருத்து.. இந்தியாவின் செயலுக்கு வரவேற்பு
நான் விடைபெறும் நேரத்தில் மீண்டும் உங்களை அதே பொறுப்புணர்வுடனும் கடமையுணர்வுடனும் சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டுமென்று கேட்டுக் கொண்டு சென்னை பெருநகர காவல் துறையின் மாண்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.