நாளை திமுக மா.செக்கள் கூட்டம்.. தேர்தல் நெருங்கும் சூழலில் அழைப்பு விடுத்த ஸ்டாலின்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் காணொளிக் காட்சி வாய்லாக பங்கேற்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் வீடு வீடாக சென்ற பரப்புரையை தொடங்க வேண்டும் என தி.மு.க மகளிர் அணியினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்த பரப்புரைக்கான தொகுதி வாரியான பயிற்சி கூட்டம் நாளை தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' பரப்புரைக்கு தொகுதி அளவில் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும் இந்தக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications