பொறுத்து இருந்து பாருங்கள்.. #Vote4INDIA - பதிவுக்கு நடிகை குஷ்பு ஆவேசமாக விளக்கம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்களித்த பிறகு ட்வீட் பதிவிட்ட நடிகை குஷ்பு, #voteforINDIA' என்று தனது எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் போட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நடிகை குஷ்பு ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார்.
நான் எதை செய்தாலும் குழப்பத்தை ஏற்படுத்துவதா? அல்லது தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.. பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று எனக்கு புரியவில்லை என குஷ்பு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பொறுத்து இருந்து பாருங்கள்: இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள தனது ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- எனது ட்வீட் பதிவில் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்பதை படித்தவர்களால், எனது பயோவில் மோடி குறித்தும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாக்களியுங்கள் என்பது குறித்தும் வாசிக்க முடியாமல் எப்படி போனது.
இந்தியா எனது தாய்நாடு. தோல்வி அடைய போகிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள் என்றுதான் என்னால் சொல்ல முடியும். களத்தில் தோல்வி அடைய போவதையும் உங்களின் பயத்தையும் இது தெளிவாக காட்டுகிறது. பொறுத்து இருந்து பாருங்கள்.. இந்த முறை மோடிதான் வருவார். பாஜகவிற்காக இந்தியா வாக்களிக்கும்" என்று பதிவிட்டு இருந்தார்.
நான் எதை செய்தாலும்..: மேலும், தனது எக்ஸ் பதிவு குறித்து குஷ்பு பேசியதாவது:- நான் எதை செய்தாலும் குழப்பத்தை ஏற்படுத்துவதா? அல்லது தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.. பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று எனக்கு புரியவில்லை. நமது நாட்டை நீங்கள் எப்படி சொல்வீர்கள்.. இதற்கு முன்பு நான் இந்தியா என போட்ட போது யாருக்கும் பிரச்சினை வரவில்லையே? பிரச்சினையை எழுப்பவும் இல்லை.
இப்படி பதிவிட்டால் தான்: லோக்சபா தேர்தலில் தேசத்திற்காகத்தானே ஓட்டு போடுகிறோம். நம் தேசத்தின் பெயரான இந்தியாவைத்தான் நான் போட்டுள்ளேன். அதில் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது.. ’Vote4INDIA' என்ற பதிவுக்கு கீழ் '400’க்கு மேல் வாக்களியுங்கள் என்ற பிரதமர் மோடியின் கோஷத்தை பதிவிட்டு இருக்கிறேன். எனது நாட்டை நான் இந்தியா என்றுதான் அழைக்கிறேன். I.N.D.I.A என்று பதிவிட்டால்தான் காங்கிரஸ் கூட்டணி என்று அர்த்தம்.
எப்படி சர்ச்சை எழுகிறது?: நான் சாதாரணமாக இந்தியா என்றுதான் பதிவிட்டு இருக்கிறேன். பிறகு எப்படி சர்ச்சை எழுகிறது? நான் உட்கார்ந்தால் பிரச்சினை, நின்றால் பிரச்சினை என்று இருந்தால் என்ன செய்வது? நான் பாஜகவில் தான் இருக்கிறேன். பிரதமர் மோடிக்காகத்தான் வாக்கு கேட்டுள்ளேன். மோடி 400 தொகுதிக்கு மேல் வெல்ல வாக்களியுங்கள் என்ற முழக்கத்தை பதிவிட்டு இருக்கிறேன். பிறகு எங்கிருந்து இந்த குழப்பம் வருகிறது” என்று கூறினார்.
செல்பி பாயிண்டில் புகைப்படம்: தமிழகம் முழுவதும் இன்று லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் வாக்களித்த பிறகு தங்கள் புகைப்படங்களையும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் தான் நடிகை குஷ்பு பதிவிட்டது விமர்சனத்திகுற்குள்ளானது.
பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவும் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது அவருடன் அவரது கணவர் சுந்தர் சியும் வந்திருந்தார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்தனர்.
விவாதப்பொருளான ஹெஸ்டேக்: இதன் பின்னர் நடிகை குஷ்பு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில், தான் வாக்களித்த புகைப்படத்தை பதிவிட்டார். கணவர் சுந்தர் சியின் புகைப்படத்தையும் அதில் போட்டிருந்தார். அந்த பதிவில் #vote4INDIA என்ற ஹேஷ்டேக் போட்டு இருந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. குஷ்பு காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்கிறார். இதற்காக தான் அவர் இந்த ஹேஸ்டேக்கை போட்டுள்ளார் என்றும் விமர்சிக்க தொடங்கினர்.
காங்கிரசினர் பயன்படுத்தி வரும் இந்த ஹேஸ்டேக்கை குஷ்பு ஏன் போட வேண்டும் என்று பாஜகவினர் குஷ்புவை விமர்சிக்க தொடங்கினர். ஏற்கனவே, உடல் நலத்தை காரணம் காட்டி பிரசாரம் செய்ய முடியாது என பாஜக தலைமைக்கு குஷ்பு ஏற்கனவே பிரசாரத்தின் போது உடல்நிலையை காரணம் காட்டி தமிழ்நாடு முழுக்க அவர் பிரசாரம் செய்யவில்லை.
கணவர் சுந்தர் சி தான் வேலூரில் ஏ சி சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தான் இவர் போட்ட ஹேஸ்டேக் மேலும் விவாதப்பொருளாக மாறியது. இதையடுத்து தான் குஷ்பு இதற்கு விளக்கம் அளித்து மேற்கண்டவாறு ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications