மோடியே விரும்புகிறார்.. அதிமுக ஒன்றிணைய எந்த தியாகமும் செய்ய தயார்.. மா.செ.க்களிடம் ஓபிஎஸ் பேச்சு
சென்னை: அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் விரும்புகின்றனர். அதிமுக ஒன்றிணைய எந்த வகையான தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பேசி உள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம். இவர் கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவரது அணி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதேபோல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கிடையே தான் மீண்டும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்துள்ளார்.
இதற்கிடையே தான் இன்று சென்னையில் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் என்பது நடந்தது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த வகையான தியாகத்தை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக மீண்டும் தோல்விடைந்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பாடம் கற்க வேண்டும். டெபாசிட் கூட இழக்கப்பட்டுள்ளது. அதிகாரம், ஆணவம் தான் இதற்கு காரணம். தொண்டர்கள் முதல் பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்பதாக இல்லை.
அதிமுக தற்போது அபாய கட்டத்தில் உள்ளது. அதிமுக ஒன்றாக இணைவதற்கு எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் திமுக அரசு தோல்வியை கண்டுள்ளது. இந்த மரணத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications