எடப்பாடி முடிவால் கண்ணீர் வடித்த நிர்வாகி.. பதிலடி கொடுத்த பாஜக.. திருப்பூர் அதிமுகவில் சலசலப்பு!
திருப்பூர்: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அதற்கு பாஜக மாவட்ட செயலாளர் பதிலடி கொடுத்துள்ளதால் இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில் பெரும் தோல்வியை சந்தித்தது. 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனி அணியாகக் களம் கண்டு தோல்வியைச் சந்தித்தனர். இந்நிலையில் மீண்டும் இம்முறை கூட்டணி அமைகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமித் ஷா, கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். எனினும், இந்தக் கூட்டணி தொடர்பாக அதிமுக கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் எழுந்துள்ளன. பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் அணி நிர்வாகி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது வருத்தம் என்றும் இருப்பினும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவும் கடந்த கால தோல்விகள் குறித்தும் பேசினார்.
கண்ணீர் மல்க பேசிய அதிமுக நிர்வாகி
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் பேசுகையில், கட்சியை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் அதிமுக இஸ்லாமியர்களை எப்போதும் கைவிடாது. எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்காக செய்த திட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களை கைவிடமாட்டோம் என்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் மல்கப் பேசினார்.
பாஜக மா.செ பதிலடி
இந்நிலையில் நேற்று இரவு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்த பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் ஆகியோரை சுட்டிக்காட்டி பொதுவெளியில் நீங்கள் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்வது சரியானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் முதலில் அம்மா என்றார் பிறகு சின்னம்மா தான் எல்லாம் என்றார் தற்போது எடப்பாடி என்கிறார். இதுதான் உங்கள் கொள்கையா, நீங்கள் பதவியில் இருக்கும் போது நல்லது செய்திருந்தால் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து இருப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை குறை கூறக்கூடாது இது சரியானது அல்ல. இதனை பொதுவெளியில் தெரிவிப்பது தவறு என பேசி உள்ளார்.
கூட்டணியில் சலசலப்பு
திருப்பூரில் அதிமுக பாஜக கூட்டணி அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அந்த ஆதங்கத்தை கட்சியினர் மத்தியில் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர்களை எச்சரிக்கும் வகையில் பாஜக மாவட்ட செயலாளர் வீடியோ வெளியிட்டிருப்பது பாஜக - அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications