"பஞ்சாங்கத்தில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என போட்டுள்ளனர்”.. சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
சென்னை: "இன்றைக்கு கூட பஞ்சாங்கம் பார்த்தேன். ஆளும் கட்சிக்கு தொல்லை அதிகம். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று பஞ்சாங்கத்தில் போடப்பட்டுள்ளது. திமுக கூட்டணி மீதி மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடந்து வருகிறது." என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "பெண்களுக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு மட்டும் 4 கொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த ஆட்சியை விட, தற்போதைய திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

வன்கொடுமை சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி மீதி மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடந்து வருகிறது. "இன்றைக்கு கூட பஞ்சாங்கம் பார்த்தேன். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஒரு பஞ்சாங்கத்தில் போடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதாக இருந்த நிலையில், இது தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து அண்மையில் திருப்பி அனுப்பியது. இது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பழி வாங்கும் நோக்கில் செயல்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கைகளை திருத்தி அனுப்புமாறே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வரக்கூடாது என்ற நோக்கத்துடனேயே, அந்த திட்ட அறிக்கையை தமிழக அரசு தயாரித்துள்ளதாகத் தோன்றுகிறது. இதனை பகிரங்க குற்றச்சாட்டாகவே நான் வைக்கிறேன்.
கோவையில் ரயில் நிலையத்துக்கும், பேருந்து நிலையத்துக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 கி.மீ தூரமாவது இருக்க வேண்டும் என்பதே மெட்ரோ ரயில் திட்டத்தின் விதி. அதனால், சில விஷயங்களை திருத்தி அனுப்புமாறுதான் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்த போது, மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள். அமெரிக்க அதிபரையே 'வந்து பார்' என்று கூறுபவர் பிரதமர் மோடி. கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில், ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி, அதை உண்மையாக மாற்ற திமுக அரசு முயற்சி செய்கிறது.
எனவே, மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். ஒருவேளை, அப்படி அனுப்பாவிட்டால், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் திட்டங்கள், பாஜகவால் செயல்படுத்தி காட்டப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications