அமரன் படத்தால் பஞ்சாயத்து..எனக்கு லிங்குசாமி ஒரு கோடி ரூபாய் தரணும்! பஞ்சாயத்துக்கு வந்த வசந்த பாலன்
சென்னை: அமரன் திரைப்படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் பலரும் தனக்கு போன் செய்து தொல்லை செய்வதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென இளைஞர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இதேபோன்று இயக்குனர் லிங்குசாமியால் பிரச்சினை வந்ததாக ப்ளாஷ்பேக்கை பகிர்ந்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.
அமரன் படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில் தன்னுடைய செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதற்கு, அமரன் பட நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 10 லட்சம் இழப்பீடாக கேட்டு சென்னை என்ஜினீயரிங் மாணவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை சாய் பல்லவி என்று நினைத்து எனக்கு தொடர்ந்து கால்கள் வருவதால் மன வேதனை அடைந்திருப்பதாகவும், இதனால் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், அடிக்கடி போன் வருவதால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியால் தனக்கும் இதேபோல் பிரச்சினை வந்ததாகவும், தற்போது தனக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென கூறியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," இயக்குநர் லிங்குசாமியால் எனக்கு அப்படியொரு சோதனை ஏற்பட்டது. சண்டக்கோழி திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக்காட்சியும் முதல் நாள் முதல் காட்சியும் பார்த்த நண்பர்கள் "சண்டக்கோழி திரைப்படம் பத்து ரன்!" என்று பாராட்டி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்.நான் லிங்குவிற்கு படம் பார்த்த நண்பர்கள் இப்படி பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார்கள், மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று லிங்குவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். லிங்குவும் நன்றி தெரிவித்து பதிலிட்டான்.
அச்சமயத்தில் நான் மதுரையில் வெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அன்று பரத், பாவனா சம்மந்தமான காட்சி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஜனநெருக்கடியான பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வேலைகளில் இறங்கியிருந்தேன். நானும் கேமராவும் மறைவான இடங்களில் இருந்து கொண்டு என் அலைபேசி வாயிலாக உதவியாளர்களுக்கும் பரத்திற்கும் உத்தரவுகள் தந்தவண்ணம் இருந்தேன். காலை 7 மணியிலிருந்தே சம்மந்த சம்மந்தமில்லாத எண்களிலிருந்து என்னை அழைத்து நீங்க தான் நடிகர் விஷாலா? இயக்குநர் லிங்குசாமியா? என்றும் இடைவிடாத போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
என் படப்பிடிப்பு வேலையவே செய்ய முடியாத வண்ணம் இடைவிடாத அழைப்புகள். ஏண்டா என் நம்பர்ல எல்லாரும் கூப்பிடுறீங்க என்று டென்சனில் ஒரு அழைப்பாளரிடம் கத்தி விட்டேன். தினத்தந்தி விளம்பரத்தில் உங்கள் நம்பர் போட்டுருக்கு சார் என்றார் ஒருவர். தினத்தந்தி வாங்கி பார்த்தால் சண்டக்கோழி திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் அலைபேசி நம்பரைப் போட்டிருந்தார்கள். கடுப்பாகி போனை அணைத்து விட்டெறிந்தேன்.
அன்று படப்பிடிப்பு முடிந்து இரவு லிங்குசாமியிடம் ஏண்டா இப்படி போட்டீங்க? என்றேன். படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றோம் என்று பதிலுரைத்தான். மனதிற்குள் வெங்காய உத்தி என்று திட்டினேன். படம் மாபெரும் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் இருந்தான் எதற்கு இந்த நேரத்தில் என் சங்கடங்களை அவனிடம் பகிர வேண்டுமென அதைப் பற்றி பேசாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு அலைபேசியை அணைத்தேன்.
நீண்ட இரவு முழுக்க நீங்க விஷாலா லிங்குசாமியா என்று தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வந்த வண்ணம் இருந்தது. அந்த நம்பரை மாற்றிய பிறகு தான் தப்பித்தேன். நாமும் லிங்குவிடம் இழப்பீடு கேட்கலாம் போலயே... டே நண்பா! குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications