ஆம்ஸ்ட்ராங்க்..பா.ரஞ்சித்..பூவை மூர்த்தியிடம் அரசியல் பயின்ற அம்பேத்கரிஸ்ட்! BSP தலைவராகும் ரஞ்சித்?
சென்னை: தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் இடையேயான நெருக்கமும் அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையும் பிஎஸ் கட்சியின் அடுத்த தலைவராக பா.ரஞ்சித் வருவாரா என்ற கேள்வியை எழ வைத்திருக்கிறது.
உயிரிழப்பதற்கு முன் வட மாவட்டங்களில் பிரபலமாக இருந்த அவர் தற்போது தமிழக முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறார். அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார்.

கல்லூரி காலத்திலிருந்து தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டவர். அம்பேத்கரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தார்.
ஏழை எளிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். தலித் மக்களுக்கான அம்பேத்கர் இயக்கத்தையும் நடத்தி வந்தார். தொடர்ந்து 2000 ஆண்டு தொடக்கத்தில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் தனது இயக்கத்தை அமைந்தகரையில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியுடன் இணைத்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாயாவதி கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளாக தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக நீடித்து வந்தார் ஆம்ஸ்ட்ராங். அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் தன்னைப்போல எளிய பின்னணியில் இருந்து வந்த மக்களை கல்வி பயிலவும் அரசியல் படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவர் ஆம்ஸ்ட்ராங்.
நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை அவர் உருவாக்கி இருக்கிறார். எப்போதும் தனது பகுதியில் எளிமையாகவும் பொதுமக்களுடன் இயல்பாகவும் பழகும் பண்பு அவரை பலரிடம் கொண்டு சேர்த்தது. இதன் காரணமாக சுயேட்சையாக போட்டியிட்டு சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது முதல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை இயக்குனர் ரஞ்சித் கண்ணீர் மல்கவே காட்சியளித்தார் பா.ரஞ்சித்துக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன தொடர்பு?
இருவருமே அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு களத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கரிய பரப்பு அரசியலுக்கு ஆம்ஸ்ட்ராங் திரைத்துறைக்கு பா.ரஞ்சித் என பரப்ப அவர்களாகவே புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். அரசியலை ஆவேசமாகவும் அதே நேரத்தில் எளிதில் புரியும் படியும் எடுத்துச் சொன்ன புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் சீடர்களாக கருதப்படும் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக பயணித்திருக்கின்றனர். பா.ரஞ்சித் முதுகலை பட்டம் படிப்பதற்கும் திரை துறையில் நுழைவதற்கும் ஆம்ஸ்ட்ராங் ஒரு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி நிகழ்வு வரை கூடவே பயணித்த ரஞ்சித் நள்ளிரவில் கோபம் கொந்தளிக்க ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் 7 கேள்விகளை திமுக அரசுக்கு அவர் முன் வைத்திருந்தார். தற்போது அதுதான் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தெடுக்க முயற்சித்த ஆம்ஸ்ட்ராங்கின் கனவை பா.ரஞ்சித் முன்னெடுத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் உடனான நெருக்கம் காரணமாக சிறுவயதிலிருந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்றுகிறார் ரஞ்சித். மேலும் அக்கட்சியின் அரசியல் பயிலரங்குகளில் பங்கெடுத்ததோடு நிறைய இடங்களில் அக்கட்சிக்காக பேசி வந்திருக்கிறார். அதே நேரத்தில் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங். மார்கழியில் மக்கள் இசை, வானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக நட்பையும் தாண்டி தனது அரசியல் வழிகாட்டியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கருதிய பா.ரஞ்சித் அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுத காட்சிகளை தமிழகமே பார்த்து கலங்கியது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தல்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நிறைய தொகுதிகளில் அக்கட்சியினர் போட்டியிட முக்கிய காரணம் ஆம்ஸ்ட்ராங் தான்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் போலவே அம்பேத்கர் கொள்கை பிடிப்பும், தெளிந்த அரசியல் பார்வையும் கொண்ட பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்த வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மாணவர்களும் பகுஜன் சமாஜ் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பா.ரஞ்சித்தின், நெருங்கி நண்பரும் எழுத்தாளருமான தமிழ் பிரபா, மெட்ராஸ் பட வசனத்தை குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதில்,"இந்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலும், இறுதி ஊர்வலத்திலும் எந்த ஒரு வன்*முறையும் நிகழாமல் நீ அடக்கம் செய்யப்பட்டாய். ஒரு தலைவன் தன் மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறான் என இந்த மாநிலம் அறிந்து கொள்வதற்கு நீ உன் உயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாய் அண்ணா. "ஒரு கூட்டத்தோட தலைவன தூக்கிட்டா இனி எல்லோரும் சிதறிப்போயிடுவானுங்க. இப்போ செய்" என மெட்ராஸ் படத்தில் வில்லன் பேசும் வசனம் வரும். ஆனால் கூட்டம் நிச்சயம் சிதறாது. முன்பெப்போதும் விட தீவிரமாக ஒன்றிணையும் காலமும், தேவையும் உருவாகியிருப்பதாகவே பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த புரட்சி அரசியலின் வரவாய் பா.ரஞ்சித் இருப்பார் என அம்பேத்கரிய ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications