"ராஜராஜ சோழன் இந்துவே இல்லை, சைவ மன்னர்!" டிகேஎஸ் இளங்கோவன் கருத்து! ஆர்எஸ்எஸ் பேரணி குறித்தும் பரபர
சென்னை: ராஜராஜ சோழன் தொடர்பான விவாதம் தொடரும் நிலையில், இது தொடர்பாக திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் ஒரு வழியாக இப்போது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிவிட்டது. இது திரையரங்குகளில் வசூலைக் குவித்து வருகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என்று பெரும் பட்டாளமே இந்தத் திரைப்படத்தில் நடித்து உள்ளது.
'அவ்ளோ’ சிறப்பா சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர்ல அவரு.. பிரஸ் மீட்டில் கிண்டல் செய்த டிகேஎஸ் இளங்கோவன்!
பொன்னியின் செல்வன்
5 பாகங்களாக வெளியான நவாலை இரண்டு பாகங்களாக எடுத்து உள்ளனர். முதல் பாகம் இப்போது வெளியாகி உள்ள நிலையில், அடுத்த பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன் தியேட்டரை தாண்டி, பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது. இதை அனைத்தையும் தொடங்கி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.. நமது அடையாளம் பறிக்கப்படுவதாகவும் வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்வதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
ஆலோசனை
இது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. வெற்றிமாறனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவனும் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். வரும் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டி.கே.எஸ் இளங்கோவன்
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழுவை நடத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சைவ மன்னர்
அப்போது பேசிய டி.கே.எஸ் இளங்கோவன் மாமன்னர் ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்று விவாதம் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், ராஜராஜ சோழன் இந்துவே கிடையாது என்று கூறிய அவர், ராஜராஜ சோழன் ஒரு சைவ மன்னர் என்றும் இது வரலாறு படிக்கும் அனைவருக்கும் இது தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் பேரணி
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும்போது எங்கெல்லாம் கலவரம் நடைபெறுகிறது என்பது மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். மேலும், கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக அக். 2ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்குத் தமிழக போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி
சில நாட்களில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் கனிமொழிக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.