சென்னை மக்களே.. நகரின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ஏரியா பக்கம் போனால் கவனம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
சென்னை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக சில முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதைத்தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.
இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி கலக்கல் வெற்றி பெற்றது. இருப்பினும், இரண்டாம் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா போட்டி
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச போட்டி நடைபெறுவதால் இதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முன்னதாக கடந்த வாரம் தான் சேப்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய ஸ்டாண்ட்களை முதல்வர் ஸ்டாலின், எம்எஸ் தோனி, உதயநிதி திறந்து வைத்தனர்.

மக்கள் ஆர்வம்
இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனைத்து ஸ்டாண்ட்களும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டாண்ட் ஒன்றுக்குத் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட்களும் விற்றுத்தீர்ந்துள்ளன. மூன்றாவது ஒரு நாள் போட்டியைப் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளன. இதற்கிடையே ஒரு நாள் போட்டி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் அறிவிப்பு
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெல்ஸ்சாலை தற்காலிக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாலாஜாசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து என்ட்ரி ஆகவும், பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒருவழிப்பாதையாகவும் செயல்படுத்தப்படும். பின்பு கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன் மேற்கண்ட போக்குவரத்து முறை எதிர்பதமாக மாற்றிச் செயல்படுத்தப்படும்.

போக்குவரத்து மாற்றம்
காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கிவரும் வாகனங்களில் எம்டிசி மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த சாலை பாரதி சாலையில் இருந்து என்ட்ரி ஆகவும், வாலாஜா சாலையில் இருந்து ஒருவழிப்பாதையாகவும் செயல்படுத்தப்படும். அண்ணாசாலையில் இருந்து வரும் எம், பி, டி, டபள்யூ ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால்ரோடு வழியாக அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்குச் சென்றடையலாம்.

வாகனங்களை நிறுத்துவது
பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்குச் சென்றடையலாம். போர் நினைவுச் சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் எம், பி, டி, டபள்யூ ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் எம்டிசி ஆகியவை பாரதி சாலை வழியாக கெனால்ரோடுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்குச் சென்றடையலாம். அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தையும் பி.டபள்யூ.டி எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தலாம்.

ஏற்பாடுகள்
அண்ணாசாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாகச் சென்று கடற்கரை உட்புறச்சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம். போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாகச் சென்று பி.டபள்யூ.டி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச் சாலைக்குச் சென்று வாகனங்களை நிறுத்தலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாகச் சென்று பி.டபள்யூ.டி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச்சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications