கொரோனா பாதித்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்.. படம் போட்டு எளிதாக விளக்கிய தமிழக அரசு.. இதை பாருங்க
சென்னை: ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், ஒருவருக்கு ஆர்டி- பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Recommended Video
ஓமிக்ரான் அச்சம் உலகெங்கும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அதேபோல தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு மளமளவென உயரத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு
நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மட்டும் 776 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டில் 146 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 80 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா
ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா உயரத் தொடங்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது. டெல்டா கொரோனாவை காட்டிலும் இந்த ஓமிக்ரான் கொரோனா குறைந்தபட்சம் 3 மடங்கு வேகமாகப் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் ஓமிக்ரான் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் 3ஆம் அலை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கு வீட்டுத் தனிமை
இந்நிலையில், ஒருவருக்கு ஆர்டி- பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. ஒருவருக்குப் பரிசோதனையில் கொரோனா உறுதியாகி, அவருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் மற்றும் மூச்சு விடுவது மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நார்மலாக இருந்தால் அவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்.

வேக்சின் போட்டிருந்தால்
மூச்சுத் திணறல் மற்றும் ஆக்சிஜன் அளவு சற்று மோசமாக இருக்கும் நபர்களுக்கு இணை நோய் இல்லையென்றால் வழக்கமான மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். இணை நோய் உள்ளவர்கள் 2 டோஸ் வேக்சின் எடுத்திருந்தாலும் வழக்கமான மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறலாம். அதேநேரம் இணை நோய் உள்ளவர் 40 வயதுக்குக் குறைவாகவும் ஒரு டோஸ் வேக்சினையும் போட்டிருந்தால் அவருக்கும் வழக்கமான மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

தீவிர பாதிப்பு
அதேநேரம் ஒரு டோஸ் போட்டுக் கொண்ட இணை நோயாளிகள் 40 வயதைத் தாண்டியவர்கள் என்றால் அவர்களை கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். அதேபோல உடலில் ஆக்சின் அளவு அதிகம் குறைந்து, கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ள நபர்களையும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications