'சனாதன' சர்ச்சை கிடக்கட்டும்!சென்னை பெருமாள் கோவிலில் 'பிரசாதம்' கொடுத்த உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளையினர் புரட்டாசி 3-வது சனிக்கிழமை நாளில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துகிற சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என முழங்கியவர் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரது இந்த முழக்கம் இன்றைக்கும் வட இந்தியாவை அதிரவைக்கிறது; பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்படவும் செய்கிறார்.

சனாதன ஒழிப்பு குறித்த பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் போடப்பட்டன; உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ10 கோடி பரிசு என்பது உள்ளிட்ட கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதன தர்மம் ஒழிப்பில் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.
இது ஒருபுறம் இருக்க புரட்டாசி சனிக்கிழமை நாளில் தமது தொகுதியான திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரசாதம் வழங்கும் பணியை தம் பெயரிலான "உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை" மேற்கொண்டு வருகிறது.

பொதுவாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகைதருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் "உதயநிதி ஸ்டாலின்" அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டன. காலை நடை திறந்ததில் தொடங்கி நள்ளிரவு நடை சாத்தும் வரை நாள் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பிரசாதம் "உதயநிதி ஸ்டாலின்" அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்ளிட்டோர் பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினர்.














Click it and Unblock the Notifications