சரியாக விஜய் மாநாடு நடக்கும் நேரம் பார்த்து.. பிரேமலதா விஜயகாந்த் போட்ட ட்வீட்.. வெடித்த விவாதம்
சென்னை: விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இன்று விக்கிரவாண்டியில் நடத்துகிறார். இதற்கு நேற்றிரவு முதலே தொண்டர்கள் அங்குக் குவிந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேமுதிக மாநாடு தொடர்பாக சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு நேற்று இரவு முதலே தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிவிட்டுள்ள ட்வீட் இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு மதுரையில் நடந்த தேமுதிக மாநாடு குறித்துப் பதிவிட்டுள்ளார்.
அந்த ஒரு ட்வீட்: பிரேமலதா விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சம் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர்! உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சரியாக மாநாடு நடக்கும் போது: தேமுதிக நடத்தியது மிகப் பெரிய மாநாடு தான். ஆனால், சரியாக இன்றைய தினம் விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு இந்த நேரத்தில் தேமுதிக மாநாடு குறித்து பிரேமலதா ட்வீட் செய்துள்ளது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. ஒரு தரப்பினர் விஜய் தரப்பைச் சீண்டும் வகையிலேயே பிரேமலதா இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.
மற்றொரு தரப்பினர், விஜய் மாநாடு தேமுதிக மாநாட்டை விஞ்சும் வகையில் இருக்கும் என்று சிலர் சொல்லும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரேமலதா விஜயகாந்த் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், அதற்குப் பலரும் பல்வேறு பதில்களை அளித்து வருகிறார்கள்.
ஒற்றுமை: விஜயகாந்த் மற்றும் விஜய் அரசியல் வருகைக்கு இடையே சுமார் 20 ஆண்டுகள் இருக்கும் போதிலும், அதில் பல ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது புதிது இல்லை. ஆனால், விஜயகாந்த்திற்கு முன்பு அரசியலுக்கு வந்த பெரும்பாலானோர் ஏற்கனவே இருக்கும் கட்சியிலேயே இணைந்தவர்கள். ஆனால், இதிலேயே விஜயகாந்த் வித்தியாசமானவராக இருந்தார்.
அவர் அரசியலுக்கு வரும் முன்பே தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வைத்தார். அவர்களில் பலர் வெற்றியும் பெற்றனர். இப்போது விஜய் ரசிகர்களும் கூட கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக: தேமுதிக என்ற அரசியல் கட்சியை 2005ல் தொடங்கினர். இதன் முதல் மாநாடு தான் மதுரையில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2006இல் 234 தொகுதிகளில் தனித்துக் களமிறங்கினார். அதில் 8% வாக்குகளைப் பெற்ற போதிலும், விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டில் தேமுதிக அதிமுக இடையே கூட்டணி ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு தேமுதிக 29 தொகுதிகளில் வென்றது.. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால், அதன் பிறகு தேமுதிக அரசியல் களத்தில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது.












Click it and Unblock the Notifications