40+ வேண்டும்.. நைசாக கேட்ட அமித் ஷா.. உடனே ஓகே சொன்ன எடப்பாடி பழனிச்சாமி.. நடந்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வரவிருக்கும் தேர்தலில் நேற்று முதல்நாள் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தையில் 40 முதல் 50 சட்டமன்றத் தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பின்போது இபிஎஸ் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் நிலவிவந்த நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, தொகுதிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் பதவி, அரசியல் உத்திகள் போன்ற பல விஷயங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

ஆனால், இபிஎஸ் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வழங்க முன்வந்தது, கூட்டணியைத் தொடரவும், ஆளும் திமுகவை எதிர்த்து பலமான கூட்டணியை உருவாக்கவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
அதிமுக கூட்டணியில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெற திட்டமிட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிமுக உள்ளேயும், அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலும் ஏற்பட்டு உள்ள மோதலால் தொடர்பாக டெல்லி பாஜக தீவிரமாக கவனித்து வருகிறதாம். டெல்லி தலைமை இதில் விரைவில் நேரடியாக தலையிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த பத்து நாட்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். தனது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், டிடிவி தினகரனின் இந்த விலகல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
நேரம் பார்த்து அதிமுகவிற்கு பாஜக செக்
இப்படிப்பட்ட நிலையில்தான் கோவையில் மட்டும் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளில், பாஜக 4 தொகுதிகளைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது. இதில் தொண்டாமுத்தூர் தொகுதியை கட்டாயம் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது எனக் கூறப்படுகிறது. இதை அமித் ஷாவும் நேரடியாக கேட்க.. எடப்பாடி அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அமித் ஷாவிடம் கேட்ட கேள்வி
மேலும், பாஜக தலைவர்கள் அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும், கட்சியின் ஸ்திரத்தன்மையே ஒருமித்த கூட்டணிக்கு அவசியம் என்றும் அமித் ஷாவிடம் அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இபிஎஸ் 40-50 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ந்து வரும் இருப்பை அவர் அங்கீகரிப்பதைக் காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மாநிலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முனைந்து வரும் பாஜகவிற்கு இது ஒரு பெரிய ஊக்கமாக அமையும்.
பாஜக 20 தொகுதி
2021 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இபிஎஸ்ஸின் இந்த சலுகை பாஜகவின் இலக்கை இரட்டிப்பாக்க அல்லது மும்மடங்காக்க உதவும். அதே நேரத்தில், இபிஎஸ் இந்த சலுகையை வழங்குவதற்கு முன் கவனமாக யோசித்திருப்பார் என கூறப்படுகிறது. பாஜகவிற்கு அதிக இடங்களை வழங்குவதன் மூலம், அதிமுக கூட்டணியில் தனது ஆதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாஜகவை ஒரு போட்டியாளராக அல்லாமல் மதிப்புமிக்க கூட்டாளியாக வைத்திருக்கவும் நம்புகிறது.
டெல்லியில் நடந்த இச்சந்திப்பின் விளைவுகள், வரவிருக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும். அடுத்த சில மாதங்களில் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்த இறுதி முடிவுகளை எடுக்க இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications