வேலூர் "கோட்டையை" கைப்பற்ற பாஜக வியூகம்.. இன்ற வருகை தருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதன் பிறகு வேலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்,
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இல்லாத நிலையில் எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு, பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயம், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்காதது, தேசிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து தற்போது மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பாஜக தற்போதே தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுக்கத் தொடங்கவிட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதியில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா. விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்தார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அமித்ஷா சென்றார். அங்கு இரவு தங்கிய அவரை இன்று காலை பல்வேறு தரப்பினர் சந்திக்கிறார்கள்.
பாஜகவின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து காலை 11.25 மணிக்கு ஹோட்டலில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகாலுக்கு செல்கிறார். அங்கு 1 நேரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு மீண்டும் கிண்டி ஹோட்டலுக்கு வருகிறார்.
அங்கு மதிய உணவுக்கு பிறகு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 1.40 மணிக்கு செல்கிறார். பிறகு வேலூருக்கு 2.30 மணிக்கு செல்லும் அவர் அங்கிருந்து காரில் பள்ளிக்கொண்டாவில் உள்ள காந்தனேரிக்கு செல்கிறார். அங்கு நடத்தும் பாஜக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அமித்ஷா வேலூருக்கு செல்வதால் அங்கு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications