18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்
Recommended Video
சென்னை: தினகரன் கட்சியில் 18 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை குறிவைத்து எடப்படியின் டீம் ஒன்று களமிறங்கியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. வேட்பு மனு தாக்கலுக்கான தேதி இன்று ஆரம்பித்துவிட்ட நிலையில் பாஜக, காங்கிரஸ் தவிர மீதமுள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில் தினகரனின் அமமுகவும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது.
இந்த நிலையில் வருகின்ற அத்தனை கருத்துக் கணிப்புகளும் திமுக கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று கூறி வருகிறது. அதிமுக ஒருசில இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டாலும் பல இடங்களில் அதிமுகவின் தோல்விக்கு அமமுக, அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் என்றே கருத்துக் கணிப்புகளும் சரி அரசியல் நோக்கர்களும் கூறிவருகிறார்கள். இதை உணர்ந்துள்ள அதிமுக தலைமை இப்போது அச்சப்பட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கல்வி கடன் ரத்து.. நீட் தேர்வு ரத்து.. 7 பேர் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
மக்களவை தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியை அம்முக வேட்பாளர்களால் பெரிதாக சேதாரம் செய்து விட முடியாது என்று எண்ணும் அதிமுக, சட்டமன்ற இடைதேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் அம்முக வேட்பாளர்கள் பெருமளவு சேதத்தை ஏற்படுத்துவார்கள் என்றே முதல்வர் தரப்பு கருதுகிறதாம். அதாவது மக்களவை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் புதியவர்கள் அதனால் தங்களது வாக்கு வங்கிக்கு பெரிய சேதம் ஏற்படாது என்று கருதுகிறது அதிமுக. அதே வேளையில் சட்டமன்ற இடைதேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைவரும் இதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு கட்சி வாக்குகள் என்பதை தாண்டி தனிப்பட்ட வாக்கு வங்கி உண்டு. ஆகவே அவர்களால் தங்களது வெற்றி பாதிக்கப்படும் என்று கருதுகிறது அதிமுக.
அதோடு மக்களவை தேர்தலை விட சட்டமன்ற இடைதேர்தல்தான் தங்களுக்கு மிக முக்கியம் என்பதால் இதில் சான்ஸ் எடுக்க அதிமுக தரப்பு விரும்பவில்லை. நடைபெறவுள்ள சட்டமன்ற இடைதேர்தலில் குறைந்தது 9 தொகுதிகளிலாவது வென்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலை உள்ளது. இந்த 9 தொகுதிகளில் ஒன்று குறைந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லாமலே ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. ஆகவே என்ன விலை கொடுத்தேனும் சட்டமன்ற இடைதேர்தலில் வென்றாக வேண்டும் என்று கருதுகிறது முதல்வர் தரப்பு.
இதற்காக தினகரன் தரப்பை இப்போதே வேறு வகைகளில் வீழ்த்த எடப்பாடி தரப்பு தயாராகிவருகிறது. அதாவது தினகரன் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றை கொடுத்து தங்கள் கட்சிக்கு இழுப்பது, அப்படி கட்சி மாற விரும்பாத விசுவாசிகளை தேர்தலில் தீவிரமாக பணியாற்றாமல் அமைதியாக இருக்க செய்வது என்று இருவேறு திட்டங்களை கைவசம் வைத்துள்ளது பழனிசாமி தரப்பு.
இந்த திட்டத்தை செயல்படுத்த இதில் திறன் வாய்ந்த சில நபர்கள் களமிறங்கியுள்ளனர். தேர்தல் தேதி நெருங்க நெருங்க இன்னும் பலே காட்சிகள் அரங்கேறலாம் என்று கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.