புதுச்சேரி பண்ணைவீட்டில் ஓய்வெடுக்கும் டிடிவி தினகரன்... திடீர் அமைதிக்கான பின்னணி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுச்சேரி பொம்மையார்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது முதல் டிடிவி தினகரன் கட்சி தொடர்பான அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழு ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் தொலைபேசி மூலம் அழைத்துப் பேசும் இவர், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தி வருகிறார்.

இதனிடையே திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், உட்பட இன்னும் பல அரசியல் கட்சிகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சமூக இடைவெளியுடன் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி நாளை கூட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்த இருக்கின்றன.
இந்நிலையில் டிடிவி தினகரன் இது தொடர்பான விவகாரங்களில் அறிக்கைகள் வெளியிட்டாலும் அதில் முன்பிருந்த காரசாரமான வார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென டிடிவி தினகரன் அமைதி காப்பதன் பின்னணியில் சசிகலாவும் சுப்பிரமணிய சுவாமியும் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சுப்பிரமணியசுவாமி அறிவுறுத்தலின் பேரில் அதிமுக அரசு மீதான அட்டாக்கை டிடிவி தினகரன் சற்று குறைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இது தொடர்பாக அமமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, அதுபோன்றெல்லாம் இல்லை என்றும், கொரோனா காலத்தில் அதை வைத்து அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை தினகரன் கவனிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நிர்வாகிகளோடு அவர் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி களநிலவரத்தை அப்டேட் செய்துகொள்வதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications