சட்டசபை, லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி?.. தினகரன் பரபர பேட்டி
Recommended Video
சென்னை: தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து சில கட்சிகளுடன் பேசி வருவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள 20 தொகுதிகள், வரக்கூடிய 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
பிளவுபட்டுள்ள அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் நிலைமை குறித்து தெரியவில்லை. அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாக, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, அமமுக, அதிமுகவுக்கான இணைப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாக தகவல்கள் உலா வருகின்றன.
நிலைப்பாடு மாற்றம்
தனித்தே போட்டி என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்த டிடிவி தினகரனும் அவ்வப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
தனித்தும் போட்டியிடுவோம்
தனித்து போட்டியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் செழுமை பெற்ற சத்துணவு திட்டத்தை சிறந்த முறையில் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. 25க்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை தொடர்ந்து நடத்தாமல் இருக்க நினைப்பது தமிழக அரசின் இயலாமையை காட்டுகிறது.
முதல்வர் செயல்பாடு சரியில்லை
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மேற்கொண்டுள்ள முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அமமுக வலியுறுத்துகிறது.
பேசி வருகிறோம்
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். தேர்தலில் தனித்து போட்டியிடவும் அமமுக தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் கூறினார்.