சென்னை - டெல்லி விமானம் ரத்து.. திடீர் இயந்திர கோளாறால் 4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்த நிலையில் இயந்திரக் கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10.05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர்.

டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு வழக்கமாக வரும் ஏர் இந்தியா விமானம் மீண்டும் காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும். பயணிகள் அனைவரும் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
டெல்லியில் இருந்து விமானத்தை இயக்கி வந்த பைலட், விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்பு, மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுதி வைத்துச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டதும் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கோளாறு சரி செய்யப்படவில்லை. சென்னை டூ டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக மதியம் 2 மணிக்கு அறிவித்தனர்.
பயணிகளை மாற்று விமானங்கள் மூலம், டெல்லிக்கு அனுப்பி வைக்க விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர். பலர் மாற்று விமானங்களில் டெல்லி செல்ல டிக்கெட் வழங்கப்பட்டது. சில பயணிகள் பயணத்தையே ரத்து செய்துவிட்டு, டிக்கெட் கட்டணங்களை திரும்பப் பெற்றனர். கனெக்டிங் விமானம் மூலம் டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பரிதவித்ததால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications