"சார், பணக்காரனாக ஒரு வழி சொல்லுங்களேன்.." மேஜிக் பார்முலாவை சொன்ன ஆனந்த் சீனிவாசன்.. ரொம்ப ஈஸிதான்!
சென்னை: நம் அனைவருக்கும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், பலருக்கும் எப்படி அந்த இடத்தை அடைய வேண்டும் என்பது தெரியாது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இதற்கான மேஜிக் பார்முலாவை பகிர்ந்துள்ளார். இது பார்க்க ஈஸி போலத் தெரிந்தாலும் செயல்படுத்துவது கஷ்டம் தான். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. இருப்பினும், பலராலும் அந்த இடத்தை அடைய முடியாது. காலம் முழுக்க உழைத்தவர்கள் கூட மிடில் கிளாஸ் என்ற இடத்திற்கு வரவே கஷ்டப்படுவார்கள். ஆனால், சிலர் பணம் மேல் பணம் பண்ணிக் கொண்டே போவார்கள். பணக்காரனாக அப்படி என்ன பார்முலா என்பது நம்மைப் போலப் பலருக்கும் புரியாமல் இருக்கும்.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது யூடியூப் வீடியோவில் இது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் சொல்வது எல்லாம் ரொம்பவே எளிமையானது தான். இது தொடர்பான கேள்விக்கு அவர், "குறைந்தது 30% சேமிக்க வேண்டும் என நான் எப்போதும் சொல்வேன். இப்போது நிலைமை மோசமாக இருக்கிறது.. எனவே, சேமிப்பை இன்னும் அதிகரிக்கவே வேண்டும்.
உங்களை வேலையில் இருந்து எடுக்கிறார்கள் என்றால் உங்களுக்கு போதிய திறமை இல்லை என அர்த்தம். போதிய திறன் இருந்தால் எளிதாக உங்களுக்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துவிடும். தங்கத்தைச் சேர்த்து வைக்கலாம். கடந்த 6 வருடங்களாக இதை நான் சொல்லி வருகிறேன். நான் இதைச் சொல்ல ஆரம்பித்தபோது தங்கம் விலை கிராமுக்கு ரூ.3000- 4000ல் இருந்தது. அப்போது முதல் தங்கத்தைச் சீராகச் சேர்ந்திருந்தால் உங்கள் கையில் ரூ.40 முதல் ரூ.50 லட்சம் இருந்திருக்கும்.
நிறைய வழிகளில் பணம் வரணும்
அடுத்து உங்களுக்கு நிறைய வழிகளில் பணம் வர வேண்டும். மிடில் கிளாஸுக்கும் பணக்காரனுக்கும் இருக்கும் வித்தியாசமே அதுதான். பணக்காரன் சொத்து 24 மணி நேரமும் வேலை செய்யும். பணக்காரன் தூங்குவான். ஆனால், அவன் பணம் தூங்காது. வேலை செய்து கொண்டே இருக்கும். பணத்திற்கு ஹார்பீட்டும் இல்லை ஒன்றும் இல்லை. இதனால் அது உங்களுக்கு வேலை செய்து கொண்டே இருக்கலாம்.
24 மணி நேரமும் வேலை செய்யும் பணம்
உதாரணமாக நீங்கள் ஒரு பங்கை வைத்திருக்கிறீர்கள் என்றால்.. அந்த நிறுவனத்தின் பொருளை யாராவது எங்காவது வாங்கினாலும் அதில் ஒரு பங்கு உங்களுக்கு வரும். நான் வாரன் பபெட் நிறுவனத்தின் பங்கை வைத்திருந்தால், உலகில் என்ன நடந்தாலும் எனக்குக் காசு வரும். நீங்கள் பலதரப்பட்ட விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்ய உங்களுக்குப் பணம் இல்லை என்றால் இரண்டாவது வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அது நிறைய இருக்கிறது. எட்டு மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் கூடுதலாக 3 மணி நேரம் வேறு வேலை பார்க்கலாம். நிறைய வேலை இருக்கு.
சம்பளம் வாங்குவோர் பணக்காரன் ஆக இருக்கும் வழி என்றால் அது தங்கம், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மட்டுமே. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பணக்காரன் ஆவது நிறையக் கடினம். அதற்கு உங்களுக்கு 5, 6 வழிகளில் இருந்து பணம் வர வேண்டும். அதில் 2 சோர்ஸ் வருமானம் உங்கள் வீட்டுச் செலவுக்கு இருக்க வேண்டும். மற்ற 4 சோர்ஸ் வருமானம் மீண்டும் சேமிப்பாகப் போக வேண்டும்.
மேஜிக் பார்முலா இதுதான்
கணவன்- மனைவி இருவரும் நிச்சயம் வேலை செய்ய வேண்டும். வருமானத்திற்குள் உங்கள் செலவு இருக்க வேண்டும். இன்று எல்லாம் வருமானம் அதிகரிக்கும் முன்பே செலவு அதிகரித்துவிடுகிறது. கிரெடிட் கார்டு தவிர்த்து, பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம் என இருந்தால் மட்டுமே ஓரளவுக்குப் பணக்காரன் ஆக முடியும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications