வைரஸ் வரும் முன் காப்போம்... பேரவை வளாகத்தில் கவனம் ஈர்த்த அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பதாகையுடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் இருவர் சட்டமன்றத்திற்கு வருகை தந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்தவாறு விழிப்புணர்வு பதாகை ஏந்தி வந்தனர்.
சட்டமன்ற கூட்டத்தொடரை திமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்த நிலையில், அரசுக்கு தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் அவர்கள் இருவரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஏய் கொரோனா.. மக்களை டர்ர்ர் ஆக்குகிறாயா?..
அசராமல்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் கடந்த ஒரு வாரகாலமாக மக்களின் இயல்பு வாழ்க்கை சர்வதேச அளவில் முடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் வலியுறுத்தல் காரணமாக, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ. இன்று அறிவித்துள்ளார்.
மாஸ்க்
இன்று காலை குறைந்த எண்ணிக்கையிலேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வந்திருந்தனர். அப்படி வந்த அவர்களும் உடனடியாக சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு வெளியேறினர். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி,ஆர்.பி.ராஜா ஆகிய இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறும், கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறும் பேரவைக்கு சென்றனர்.
பாதுகாப்பு
சட்டமன்ற வளாகத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கியிருந்தார். இப்போது அதேபோன்று மாஸ்க், கை உறை, சானிடைஸர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஒரு கிட் பாக்ஸ்களை தனது திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட பகுதியில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
அறிவுறுத்தல்
மேலும், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி திமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் மார்ச் 31-ம் தேதி வரை தங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அலைபேசி மூலமாகவே அதிகாரிகளையும், கட்சி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், விழிப்புணர்வுடன் செயல்படுவது பற்றியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.