பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் முறை மாற்றப்படுகிறதா?.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
சென்னை: 12ம் வகுப்பு பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், வினாத்தாள் முறையை மாற்றுவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஹோபர்ட் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், எழிலன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
மேலும் பள்ளியில் மரக்கன்றை நட்டும், அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

மாணவர்கள்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு உள்ளன. மாணவர்களிடம் தானே நேரடியாக கேட்டபோது, பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதியுதவி
மேலும் ஹோபார்ட் பள்ளிகள் போன்று வரலாற்று சிறப்புமிக்க பள்ளிகள் நிறையவே உள்ளன என்ற அவர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு வாரத்திற்கு
தொடர்ந்து பேசிய அவர், ஒரு வாரத்திற்கு பள்ளிக்கு மாணவர்கள் வருகையை கண்காணித்து, அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிகள் மூடி இருந்தாலும், மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் மாணவர்களுக்கு அரசு கல்வியை அளித்து தான் வருவதாக தெரிவித்தார்.
Recommended Video

12 ஆம் வகுப்பு பாடங்கள்
இந்நிலையில் 12-ம் வகுப்பு பாடங்கள் குறைக்கப்பட்டாலும், வினாத் தாள் முறையை மாற்றுவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று அமைச்சர் கூறினார். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில், மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு கட்டணத்தை காரணம் காட்ட கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது என்றும், அதுபோன்று புகார் வந்தால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிகள் திறந்தன
தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். அவர்களை பூங்கொத்து கொடுத்தும் இனிப்பு கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிருமிநாசினி கொடுக்கப்பட்டது.

பெஞ்சுக்கு இருவர் மட்டுமே
ஒரு பெஞ்சுக்கு இரு மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்களே இருந்தனர். சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களும் இரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் 6 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications