“மும்மொழிக்கொள்கை என்பதே இன்னொரு மொழிப்போர்தான்!” மத்திய கல்வி அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி
சென்னை: புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்திற்கான நிதியுதவியை விடுவிப்போம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் உரையை மேற்கோள்காட்டி, வண்ணச் சேலையா கேட்கிறோம்? பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்! என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் 3.O நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர், "தமிழகத்திற்கான கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்கு தெரியும். அம்மாநில அரசு, அரசியல் காரணங்களுக்காகவே புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கிறது.
மும்மொழிக்கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது. தமிழக அரசு இரு மொழிக்கொள்கையை சொல்லி மக்களை குழப்புகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழை படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. இதனை ஏற்காததால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2152 கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதியை வழங்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் முதல்வர் அண்ணாவின் உரையை மேற்கோள்காட்டி தர்மேந்திர பிராதானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தனது x தளத்தில், "வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
'இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்'" என்று பதிவிட்டுள்ளார். மேலும், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இதில் சுமார் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. மும்மொழிக் கொள்கை என்பது நமக்கு தேவையில்லாதது. எங்களை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறீர்கள். இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி. அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நீங்கள் சொல்வதே, இன்னொரு மொழிப்போரை தூண்டுவதுபோல் தான் அமைந்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.
பிரச்சனை என்ன?
3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான். அப்படி இருக்கையில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை கல்வியாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது" என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications