குட்கா குறித்து நான் பேசாமல் இருக்க ரூ 1000 கோடி தருவதாக பேரம் பேசினார்கள்! அன்புமணி பகீர்
வேலூர்: தமிழகத்தில் குட்கா குறித்து நான் வாயை திறக்காமல் இருக்க ரூ 1000 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள். ஆனால் நான் எதற்கும் அசரவில்லை, எனக்கு பணம் முக்கியமல்ல என பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட பாமக பொதுக் குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் பேசுகையில், குட்கா, புகையிலை உள்ளிட்டவை குறித்து நான் பேசாமல் இருக்க எனக்கு பல கோடி ரூபாய் தர முன் வந்தனர். இது போன்ற பல லாபிகளை பார்த்துள்ளேன்.
அத்தனை லாபிகளையும் தன்னந்தனியாக எதிர்த்தவன் இந்த அன்புமணி ராமதாஸ். நான் குட்கா, புகையிலை குறித்து பேசுவதை தடுத்து என் வாயை அடைக்க யார் யார் மூலமாகவோ வந்து பேரம் பேசினர். "உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தால் போதும்" என்றார்கள்.
குட்கா
குட்கா குறித்து நான் பேசாமல் இருக்க ரூ 1000 கோடி தருவதாக அன்று சொன்னார்கள். புகையிலை லாபிக்கு ரூ 5000 கோடி தருவதாக சொன்னார்கள். எங்கு எப்படி வேண்டும் என சொல்லுமாறு கேட்டார்கள். நான் நினைத்திருந்தால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு எப்படியோ இருந்திருப்பேன்.
பணம் முக்கியமில்லை
ஆனால் எனக்கு பணம் முக்கியமில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் முக்கியம். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன் முக்கியம். நான் மன உறுதியோடு இருந்தேன். பணம் வேண்டுமானால் எப்படியும் சம்பாதிக்கலாம். நமது கட்சியின் நற்பெயர்தான் முக்கியம். இன்னும் 8 மாதங்களில் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
பாமக பலவீனம்
பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். திமுக பாமகவுக்கு துரோகம் செய்தது. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.
யார எதிர்க்கணும்
நாம யார எதிர்க்கணும், நமக்கு யாரு எதிரி? அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல.. பலம்.. திமுக மூலமாக நமது கட்சியில் நடக்கும் சூழ்ச்சியை நிச்சயம் முறியடிப்போம். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்
அது போல் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைக்கு ராமதாஸோ அல்லது நானோ காரணம் இல்லை. திமுகதான் காரணம்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. வரும் சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்டது. இந்த பயம் முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் வந்துவிட்டது. இந்த பயம் வந்த பிறகு நமது கட்சியை பலவீனப்படுத்த சூழ்ச்சிகளை செய்கிறார்கள்.
கட்சிக்குள் நடக்கும் குழப்பம்
கட்சிக்குள் நடக்கும் குழப்பத்திற்கு மருத்துவர் ராமதாஸோ நானோ காரணல்ல. இதற்கு திமுக மட்டுமே வில்லன் என தெரிவித்திருந்தார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளன. இந்த நிலையில் பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே சண்டை நிலவி வருகிறது.
அன்புமணி மீது ராமதாஸ்
அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். ராமதாஸை யாரோ இயக்குகிறார்கள் என அன்புமணி புகார் கூறுகிறார்கள் . மேலும் கட்சி நிர்வாகிகளை மாற்றி ,தனது ஆதரவாளர்களை நியமிக்கும் பணிகளையும் இருவரும் செய்கிறார்கள்.
ஆதங்கம்
கட்சியை தன் கைக்குள் கொண்டு வர அன்புமணி முயற்சிக்கிறார். ஆனால் தனக்கு வயதாகிவிட்டாலும் சிங்கம் சிங்கம்தான் என ராமதாஸ் கர்ஜிக்கிறார். திடீரென நான் என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள் என ராமதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தார். இப்படியாக இவர்களுக்குள் பிரச்சினை நடந்து வரும் நிலையில் தந்தை- மகனிடையே சமாதானம் எப்போது ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications