காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்புகள் என்ன? உண்மையை தோலுரித்துக் காட்டிய அன்புமணி ராமதாஸ்!
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்புகள் என்னவென்பதை தனது கேள்விகள் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு புதிதாக எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்பதன் மூலம் மேகேதாது அணை பற்றி அந்த ஆணையத்தின் கூட்டத்தில் பேச முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அன்புமணி கேள்வி
‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள், பொறுப்புகள், அதிகாரங்கள், அதிகார வரம்புகள் என்னென்ன?''
''ஆணையத்தின் அதிகாரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டதா? அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அவற்றின் விவரங்களைத் தருக?'' என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்றத்தில் வினா எழுப்பியிருந்தார்.

நீர்வளத்துறை இணையமைச்சர்
அதற்கு மத்திய நீர்வளத்துறையின் இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு எழுத்து மூலம் அளித்த விடையின் விவரம் வருமறு; ''1956-ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிநீர் சிக்கல் சட்டத்தின் 6ஏ பிரிவின்படி வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்துவதற்காக, 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைப்பதற்கான அரசிதழ் அறிவிக்கையை 01.06.2018 அன்று மத்திய அரசு வெளியிட்டது.''

திருத்தம் இல்லை
''இந்த அறிவிக்கையின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை http://jalshakti-dowr.gov.in/sites/default/files/CWMA_GazatteNotification.pdf என்ற இணைப்பில் உள்ள அறிவிக்கையின் 10&ஆவது பத்தியில் பார்க்க முடியும்.01.06.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில் அதன்பின் எந்த திருத்தங்களும் செய்யப்படவில்லை.'' இவ்வாறு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு பதில்
01.06.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையின் பத்தாவது பத்தியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு 21 அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் எந்த இடத்திலும் காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவது குறித்த திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் அதிகாரமோ, அனுமதி அளிக்கும் அதிகாரமோ வழங்கப்படவில்லை. அதன்பின் புதிய அதிகாரங்களை வழங்கும் வகையில் அறிவிக்கையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது.
Recommended Video

பேச முடியாது
இதன்மூலம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க முடியாது என்பது தெளிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications