"அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே காரணம்! நாம 40 இடங்களில் ஜெயிச்சிட்டோம்" சிலாகித்த அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் வீசிய அலையால் கூட, பாமக வலுவாக உள்ள பகுதிகளில் எதுவும் செய்ய முடியவில்லை, 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றிக்கு நாம்தான் காரணம் என பாமக தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு அரசியலின் வழித்திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் உரிமைக்குரலாகவும் விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38&ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் நமது நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

anbumani

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்தையும், மது ஒழிப்பையும் நோக்கமாகக் கொண்டு தான் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் 1989&ஆம் ஆண்டு ஜூலை 16&ஆம் நாள் கடற்கரை சீரணி அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். மருத்துவர் அய்யா அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அவர் வகுத்துக் கொடுத்தப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஓர் அரசியல் இயக்கத்தின் வெற்றி ஆட்சியைப் பிடிப்பது மட்டும் தானா என்றால் இல்லை. அதிகாரத்திற்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகார மையத்தையும் இயங்கச் செய்வது தான் ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சிக்கல்களை பாட்டாளி மக்கள் கட்சி பேசினால், அதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவது இதற்கு சான்று ஆகும்.

இந்தியாவின் அரசியல் என்பது 16&ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த காலத்தில் தொடங்குகிறது. அதற்கு வயது குறைந்தபட்சம் 500 ஆண்டுகள். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசியல் 78 ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது. இந்த காலகட்டங்களில் நாடு முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் பயனடையும் வகையில் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்த ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளிகளுக்கு இதைவிட வேறு பெருமை தேவையில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 37 ஆண்டுகளில் தமிழக மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வேளாண்மை, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இயக்கங்களாலும், பணிகளாலும் தமிழ்நாட்டில் பயனடையாத குடும்பங்களே இருக்க முடியாது என்பதை நினைத்து நாம் அனைவரும் பெருமிதப் படலாம்.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை பாராட்டியிருக்கலாம்; விமர்சித்திருக்கலாம்; ஆனால், மக்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகளை எந்தவொரு இயக்கத்தாலும் மறுக்க முடியாது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உறுதியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி இன்றளவும் நிலைத்திருப்பதற்கு காரணம் நமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தான்.

கடந்த ஆண்டு ஜூலை 16&ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு தொடக்கவிழாவைக் கொண்டாடிய போது மக்களுக்காக தொடர்ந்து உழைக்க உறுதியேற்றுக் கொண்டோம். அடுத்த 10 நாள்களில், சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25&ஆம் நாள் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் அமோக ஆதரவுடன் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கினேன். சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கி 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வழியாக 108 நாள்களுக்கு தொடர்ந்த அந்தப் பயணம் தருமபுரியில் நிறைவடைந்தது. திமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் அடைந்த சீரழிவுகளை அம்பலப்படுத்தினோம். அது தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. அந்தப் பயணத்தில் நாம் சுட்டிக் காட்டிய ஏராளமான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவது நமது வலிமையையும், மதிப்பையும் காட்டுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பினோம். நான் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் கிடைத்த மக்களின் அமோக ஆதரவு நமது நம்பிக்கையை உறுதி செய்தது. ஆனால், எவருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின. ஆனாலும் கூட நாம் மலை போல வலுவாக உள்ள பகுதிகளில் அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35&க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நாம் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் நாம் பெற்ற அந்த 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமமானது என்பதை பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் ஓய்வெடுக்கவில்லை. நமது மக்கள் பணி முன்பை விட வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பது நமது 46 ஆண்டு கால கோரிக்கை ஆகும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுனர் உரை மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறோம். இதை விட மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கக் கூடிய நற்செய்தி பாட்டாளிகளாகிய நமக்கு இருக்க முடியுமா?

தமிழ்நாட்டின் பெரும்பான்மையினர் என்றால் அது விவசாயிகள் தான். அவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்; இனியும் அத்தகைய குற்றங்கள் நடக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு உயிர்பயத்தைக் காட்டும் அளவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்; மதுக்கடைகள் மட்டுமின்றி, சந்துக்கடைகளையும், போதைப் பொருள்கள் விற்பனையையும் முற்றிலுமாக ஒழித்து இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும் என்பனவற்றுக்கான நமது குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதன் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது மேகதாது அணை சிக்கல். காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய, 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களை பறிக்கக் கூடிய அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அது குறித்து இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணியும் பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை உங்கள் ஆதரவுடன் நான் மேற்கொண்ட பரப்புரை பயணம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் இன்று மேகதாது அணைக்கு எதிராக அவர்களின் பாணியில் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இது தானே நாம் எதிர்பார்த்த அதிசயம்?

ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுக்கும் நிலையிலேயே தொடர முடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே மருத்துவர் அய்யா அவர்களின் கனவு; அது தான் நம் அனைவரின் நோக்கம். மருத்துவர் அய்யா அவர்களின் கனவை நனவாக்கும் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38&ஆம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும். இந்த ஆண்டின் அரசியலிலும், சமூகநீதியிலும் மேலும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 38&ஆம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அனைத்துக் கிளைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழாக்கள் நடத்தப்பட வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் அளிக்கும் நிகழ்வுகளில் உங்களை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+