சின்ன நாடுகள் பதக்கம் அள்ளுகின்றன.. 110 கோடி பேர் கொண்ட இந்தியா திணறுது! வேதனையுடன் பேசிய அன்புமணி
சென்னை: இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் தங்கம் வெல்கிறது, 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தங்கம் வெல்ல முடியவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும், கிராமப்புறங்களிலும் மாவட்ட அளவிலான மைதானங்கள் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி கல்லூரியில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டி தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகம் சார்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி போட்டியினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விளையாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடி போட்டியினை துவக்கி வைத்தார். முன்னதாக தேசிய அளவிலான இப் போட்டிக்கு இந்தியாவில் உள்ள டெல்லி, அரியானா, ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்களை சந்தித்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, அன்புமணி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிறகு செய்தியாளர்கள் சந்தித்த அவர்," தமிழ்நாட்டில் மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவதற்காக இன்னும் அதிகமான முயற்சிகள் வேண்டும். பொதுவாக மாணவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானங்கள் குறைவாக உள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானங்கள் ஒரு சில இடங்களில் உள்ள நிலையில் மாணவர்கள் விளையாட்டில் மேம்படுவதற்கு தாமதமாகுவதாகும்.
மொத்தமாகவே இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம் விளையாட்டில் ஆசிய போட்டிகளில் தங்கம் வெல்லும் நிலையில், 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்கம் வெல்ல முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில அரசு பள்ளிகளை மட்டுமே விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதிலும் சில இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற போக்கை இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் விளையாடுவதற்கு மைதானமே இல்லை என்பதும் இத்தகைய நிலையில் மாணவர்கள் விளையாட்டில் மேம்பட மிகவும் கடினப்படுவார்கள் என்பதே வேதனைக்குரிய செயலாகும். இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் மீது மிகுந்த கவனத்தை செலுத்தி இந்த அரசு விளையாட்டில் முன்னேற்றம் அடைய போதிய நிதி ஆதாரங்களையும் விளையாட்டு மைதானங்களையும் அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு இறகுப்பந்து விளையாட்டு கழகம் சார்பாக கோரிக்கை வைக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications