அம்மா மீது சிறு துரும்பை கூட படவிட மாட்டேன்.. நான் பாட்டிலால் அடித்தேனா.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
சென்னை: உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் அம்மா தான் என்றும், என் அம்மா மீது சிறு துரும்பை கூட படவிட மாட்டேன் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எவ்வளவோ அவமானங்களை சந்தித்துவிட்டதாக கூறிய அன்புமணி, பாமகவில் நிர்வாகிகளை மாற்றவோ, பதவியை பறிக்கவோ நிறுவனர் ராமதாஸ்-க்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையில் மோதல் போக்கு உச்சத்தில் உள்ளது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனம் நியமிக்கப்பட்டதில் இருந்து சிக்கல் தொடங்கியது. இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் தொடர்பாக பொங்கல் சமயத்தில் பேசி கொண்டிருந்தோம்.

அம்மா மீது அட்டாக்
அப்போது அவரின் அம்மா, அந்த பொறுப்புக்கு உன் மகளை நியமனம் செய்திருந்தால், அப்போதும் மறுப்பு தெரிவித்திருப்பாயா என்று கேட்ட போது, திடீரென ஒரு பாட்டிலை எடுத்து அம்மா மீது வீசினார். அது அவரின் மீது படவில்லை. வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்துவிட்டது. என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேட முயல்கிறார் என்று தெரிவித்தார்.
அன்புமணி விளக்கம்
தனது தாயின் மீது அன்புமணி பாட்டிலை கொண்டு எறிந்தார் என்று ராமதாஸ் குற்றச்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராமதாஸின் இந்த குற்றச்சாட்டிற்கு அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், இந்த உலகில் எனக்கும் மிகவும் பிடித்தவர் எனது அம்மா தான். எனது அம்மா மீது சிறு துரும்பை கூட பட விடமாட்டேன்.
சுதந்திரம் இல்லை
நான் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துள்ளேன். இதையும் கடந்து செல்வோம். பாமகவில் நிர்வாகிகளை மாற்ற ராமதாஸ்-க்கு அதிகாரம் இல்லை. கட்சித் தலைவராகிய எனக்கே அதிகாரம் உள்ளது. அதனால் நிர்வாகிகள் நீக்கம் தொடர்பான செய்திகளை பாமகவினர் நம்ப தேவையில்லை. நான் தலைவராக பொறுப்பேற்ற பின் என்னால் சுதந்திரமாக செயல்படவே முடியவில்லை.
சுதந்திரமாக செயல்படுவேன்
ஆனால் இன்றில் இருந்து என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். எந்த சோதனை வந்தாலும் சாதனையாக மாற்றுவோம். நான் பார்த்து கொள்கிறேன். வரும் நாட்களில் பாமக தொண்டர்கள் தூள் செய்ய வேண்டும். இதற்கு மேல் நாம் வேகமாக செயல்பட வேண்டும். நீங்கள் எனக்கு அடி பணிந்தவர்கள் கிடையாது. என் சக தோழர்கள்.
கூட்டணி ஆட்சி
நான் என்று கிடையாது.. இனி நாம். உலக அளவில் பாமக நடத்திய மாநாடு கவனம் பெற்றுள்ளது. மாநாடு நடத்துவதற்கான நிதியையும் நீங்கள் தான் கொடுத்தீர்கள். வரும் தேர்தலில் நமது கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். நாம் கூட்டணி ஆட்சி அமைக்க வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications