'பெரும் வேதனை..' ஆன்லைன் ரம்மி தொடரும் தற்கொலை.. தமிழக அரசின் உடனடி நடவடிக்கை தேவை.. அன்புமணி ட்வீட்
சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இதனைத் தடை செய்யத் திருத்தப்பட்ட சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாகப் பல இளைஞர்கள் உயிரிழக்கின்றனர். சூதாட்டம் போல இருக்கும் இதனைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அதனடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் விதமாகத் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

ஆன்லைன் ரம்மி
இந்த சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் மீண்டும் இந்த ஆன்னலைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்குத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை விரைவில் இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், " விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது!

குவியும் விளம்பரம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பாமக வலியுறுத்தி வந்ததன் பயனாக, கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு! ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன. தடை விலகிய 16 நாட்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம்!

உடனடியாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும்! இளைஞர் பச்சையப்பனின் தற்கொலை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் எவரும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மாயவலையில் சிக்கி விடாமல் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications