அண்ணா நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு? முன்னாள் அமைச்சரை முந்தும் முதல்முறை வேட்பாளர்? சர்வே ரிசல்ட்
சென்னை: சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுகவின் சிற்றரசு, அதிமுகவின் கோகுல இந்திரா, தவெக சார்பில் ராம்குமார், நாதக-வின் சங்கர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் முந்துவது யார்? என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் சென்னையின் அண்ணா நகர் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.

அண்ணா நகர் தொகுதி
1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலின் மிக முக்கியமான விஐபி தொகுதியாகத் திகழ்கிறது. அண்ணா நகர் சட்டசபை தொகுதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் அங்கு வெற்றி பெற்றுள்ளனர்.
அண்ணா நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 1,81,402. ஆண் வாக்காளர்கள் 87,325; பெண் வாக்காளர்கள் 94,029, மாற்றுப் பாலினத்தவர் 48 வாக்காளர்கள் உள்ளனர். அண்ணா நகர் கிழக்கு மற்றும் மேற்கு, சாந்தி காலனி, ஷெனாய் நகர், அமிஞ்சிக்கரை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி மற்றும் சூளைமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் அனைத்து சமூகத்தினரும் பரவலாக வசிக்கின்றனர். இந்த தொகுதியில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஐடி ஊழியர்கள் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் போன்ற உயர் பணியிலுள்ளவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
அண்ணா நகர் - இதுவரை வெற்றி தோல்வி
1977ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில், இந்த தொகுதியில் திமுக 9 முறை (1977, 1980, 1984, 1989, 1996, 2001, 2006, 2016, 2021) வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. அதேசமயம், அதிமுக 2011ஆம் ஆண்டில் ஒருமுறையும், காங்கிரஸ் 1991ஆம் ஆண்டில் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.கே.மோகன், எதிர்த்துப் போட்டியிட்ட கோகுல இந்திராவை விட 1,687 வாக்குகள் கூடுதலாக பெற்று மீண்டும் தொகுதியை திமுக வசமாக்கினார்.
2021 தேர்தலில் மீண்டும் திமுகவின் எம்.கே.மோகன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கோகுல இந்திராவை 27,445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-வது முறையாக வெற்றி பெற்றார்.
அண்ணா நகர் - இந்த முறை களம் யாருக்கு?
இந்த முறையும் இந்த தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு முதன்முறையாக அண்ணா நகர் தொகுதியில் களமிறங்குகிறார். திமுகவின் கோட்டை என நிரூபிக்க தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சிற்றரசு.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா தற்போது 4-வது முறையாகப் போட்டியிடுகிறார். கோகுல இந்திரா இங்கு 2011-ல் அதிமுக சார்பில் இங்கு வெற்றி பெற்றவர். த.வெ.க சார்பில் வி.கே. ராம்குமார் போட்டியிடுகிறார். நாதக சார்பில் வழக்கறிஞர் எஸ். சங்கர். உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், மாற்று அரசியல் முழக்கத்துடன் களம் காண்கிறார்.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. மின்னம்பலம் ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிற்றரசு வெற்றிக் கனியை பறிக்க வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி -38 %
அதிமுக கூட்டணி- 29%
தவெக- 20%
நாதக- 6% வாக்குகள் பெறும் என்று மின்னம்பலம் நடத்திய சர்வேயில் கணிக்கப்பட்டுள்ளது.
அக்னி நியூஸ் சர்வீசஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, அண்ணா நகர் உள்பட சென்னையின் 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சிற்றரசு வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பிலும் அண்ணா நகர் தொகுதியில் திமுக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிற்றரசுவுக்கு 41% வாக்குகளும், அதிமுகவின் கோகுல இந்திராவுக்கு 36% வாக்குகளும், தவெகவுக்கு 14% வாக்குகளும், நாதகவுக்கு 6% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications