அண்ணா பல்கலை..எனக்கொரு டவுட்டு! சாட்டையடி வலி கூட போயிருக்காது..சூட்டோடு சூடாக அண்ணாமலை போட்ட பதிவு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்த வருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை. சம்பவம்:
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எஃப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார் சென்னை காவல் ஆணையரான அருண்.
காவல் ஆணையர் அருண்:
"எஃப்ஐஆர்-ல் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுத வேண்டும் என்பதுதான் விதி. அண்ணா பல்கலைக்கழகத்தில் 77 சிசிடிவி கேமராக்கள் இருக்கும் நிலையில் 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்தது. அதில் வைத்து தான் குற்றவாளியை பிடித்திருக்கிறோம். ஞானசேகரன் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாரா? என்பது போன்ற எந்த தகவலும் கிடையாது என கூறினார்.
அமைச்சர் கோவி செழியன்:
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன்," அண்ணா பல்கலைக்கழக பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பாக பாலியல் புகார் கமிட்டியில் இருந்து புகார் வரவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. என்பது சதவீத கேமராக்கள் செயல்படுகிறது. 10 20-ல் குறைபாடுகள் உள்ளது. ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. 8 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வந்து போயிருக்கிறார். முழு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது மனைவி பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் அவரை உள்ளே வர வேண்டாம் என சொல்ல முடியவில்லை" எனக் கூறினார்.
முரண்பாடு:
இந்த நிலையில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எப்படி புகார் வந்தது? சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இருந்ததா? இல்லையா?, ஞானசேகரன் மனைவி அங்கு வேலை செய்கிறாரா? இல்லையா? என்பது குறித்து அமைச்சர் கோவி செழியனும், சென்னை மாநகர காவல் ஆணையர் அருனும் முரண்பட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்
அண்ணாமலை:
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்," உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார்.
யாரை காப்பாற்றுகிறது திமுக?
ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது? அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
பாஜக விடப் போவதில்லை:
இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை
பாஜக இதனை விடப் போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications