80 பொறியியல் கல்லூரிகளுக்கு ‘செக்’.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு! மாணவர்களுக்கு பெரிய சிக்கல்?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு அங்கீகாரத்தை தொடர்ந்து புதுப்பித்தால் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் அந்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும். இந்நிலையில், 80 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
80 பொறியியல் கல்லூரிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தகுந்த எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லை, உரிய ஆய்வகங்கள் இல்லை என்ற காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகம், அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
80 பொறியியல் கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக குழுவினர் விரைவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். உட்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஆய்வின்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை சரி செய்யாமல் உள்ள கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அரசு கல்லூரிகளுக்கோ, பிற தனியார் கல்லூரிகளுக்கோ மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications