விஏஓ மீது லாரி ஏற்றி கொலை முயற்சி..திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான்..அண்ணாமலை,தினகரன் பாய்ச்சல்!
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன், பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாஸ் இல்லாமல் மணல் அள்ளிய லாரிகளை காவல் நிலையத்திற்கு போகச் சொல்லி பின்னால் சென்ற நிலையில், விஏஓ உள்ளிட்டோர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்றனர்.

விஏஓ மற்றும் அவரது உதவியாளரை கொல்ல முயன்று, தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ லூர்து ராஜ் என்பவர் மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை ஆவேசம்: இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பழனி அருகே, மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர், காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால், மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதன்படியே, மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகளைக் கொலை செய்வதும், அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், தொடர்கிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.
ஆனால், சட்டம் ஒழுங்கு பற்றியோ, அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல், திமுகவினர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது திமுக அரசு. திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த பொதுமக்களைப் போல, போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு அரசு அதிகாரிகளையும் தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த விடியாத அரசு." எனத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கொதிப்பு: இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்கச் முயன்ற வி.ஏ.ஓ மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஆயக்குடி அருகே தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வி.ஏ.ஓ கருப்பசாமி மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலர் லாரியை ஏற்றி கொலை முயற்சி செய்ய முற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டின் வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்டதன் சுவடே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியதாக வரும் செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எடுத்துக்காட்டாக அமையும் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications