அண்ணாமலையை மாற்ற முடியாது? அமித்ஷா சந்திப்பு ஏன்? பொங்கி எழுந்த ரவீந்திரன் துரைசாமி
சென்னை: பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலையே நீடிப்பார் என்றும் அவருக்கு இணையாக ஒப்பிடும் அளவுக்கு வேறு யாரும் அக்கட்சியில் இல்லை என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒரு பார்வையை முன்வைத்துள்ளார்.
மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் என சில மாதங்களாகவே ஊகங்கள் வலம்வருகின்றன. இந்தப் பதவி மாற்றம் அண்ணாமலை லண்டன் பயணத்தை அடுத்து நடக்காலாம் என்றும் முன்பு கூறப்பட்டது. அடுத்த தலைவர் யார் என்பது பற்றிய ஆலோசனையில் தமிழிசை இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு தரப்பு வானதி சீனிவாசனை முன்வைத்து ஒரு விவாதத்தை நடத்தி வருகிறது.

சர்வதேச அரசியல் பற்றிப் படிப்பதற்காக இந்திய அரசியல் தலைவர்கள் சிலருக்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் செல்ல இருக்கிறார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன. அங்கே அவர் 12 வாரங்கள் வரை தங்கி இருப்பார் எனச் சொல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு முடிவு இதுவரை தெளிவாக எட்டப்படவில்லை. அண்ணாமலைக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்படுவார்களா என்பதும் இதுவரை உறுதியாகவில்லை. இதனிடையே அண்ணாமலை அமித்ஷாவைச் சந்தித்து திரும்பியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
இந்த விவகாரம் குறித்து மோடி ஆதரவாளரும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி சில கருத்துகளைப் பேசியுள்ளார். அவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா என்பது பற்றிப் பேசுகையில், "அண்ணாமலைதான் தமிழக பாஜகவின் பலம். அவர் மோடிக்கு மிகப்பெரிய சொத்து. 3.5% இருந்த பாஜகவை அண்ணாமலை தலைமை ஏற்று 3 மடங்குக்கு மேல் கொண்டு சென்றுள்ளார். எனவே அவர்தான் மாநிலத் தலைவர். அவரை யாருடனும் ஒப்பிடவே முடியாது. அந்தளவு பெரிய ஆள் அவர். அண்ணாமலை மாற்றப்பட வேண்டும் என பாஜகவுக்குள் பேசுபவர்கள் எல்லாம் 'நோட்டா'வுக்கு கீழாகக் கட்சியைக் கொண்டு சென்ற தமிழிசையின் ஆதரவாளர்கள். அண்ணாமலை அப்படியல்ல. கட்சியைப் பல மடங்கு உயர்த்திருக்கிறார். இரட்டை இலையை பல இடங்களில் 3ஆவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறார். இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணிக்கு 2வது இடமா? என்.டி.ஏ கூட்டணிக்கு 2வது இடமா என்று போட்டி நிலவும் அளவுக்குக் கட்சியைக் கரை சேர்த்திருப்பவர் அண்ணாமலை.
ஆயிரம் தான் பாஜகவைச் சீமான் விமர்சித்தாலும் அவரை அண்ணன் என்று போய் அண்ணாமலை கட்டிப் பிடிக்கிறார். அவருக்குத் தெரியும்? சீமானுக்கு மோடியிடம் என்ன மாதிரியான மரியாதை உள்ளது என்று? அதை உணர்ந்தே அவர் சீமானை 2026 தேர்தலில் பாஜக பக்கம் கொண்டுவர முயற்சிக்கிறார். ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி விட்டார். அதற்கு மோடி கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையை முன்னிறுத்தியதுதான் காரணம். மற்றொரு பக்கம் திமுகவினால் எடப்பாடி பலவீனப்படுத்தப்பட்டுவிட்டார். பிறகு எப்படி அவர் 2026இல் ஆட்சிக்கு வருவார்?
பலரும் சொல்வதைப் போல 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்து இருந்தால் இன்னும் பலமான தோல்வியைத்தான் அந்த அணி சந்தித்து இருக்கும். வன்னியர் அல்லாதவர்களின் வாக்கு முழுக்க திமுக பக்கம் போய் இருக்கும். கொங்கு வேளாளர் இல்லாதவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்கு வாக்களித்திருப்பார்கள். என்.டி.ஏவுக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓபிஎஸ், தினகரன் கூட திமுக பக்கம் போய் இருப்பார்கள். திமுக 53%க்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கும். இது எனது வியூகம் தான். 2019இல் என்ன நடந்ததோ அதை வைத்துக் கணித்து இதைச் சொல்கிறேன்.
ஆகவேதான் அண்ணாமலை மீதும் அவர் வளர்ச்சியின் மீதும் பயம் உள்ளவர்கள் அவரை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று ஒரு வதந்தியைப் பரப்புகிறார்கள். அது உண்மையல்ல” என்கிறார்.












Click it and Unblock the Notifications