சேவாக் சாதனை காலி! இந்தியாவின் நம்பர் 1 ஓப்பனர் ரோஹித் சர்மா.. சென்னையில் சம்பவம் செய்த ஹிட்மேன்!
சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடியதுடன் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 79 ரன்களை விளாசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வடிவ போட்டிகளையும் சேர்த்து தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்த ஒட்டுமொத்த இந்திய வீரர்களின் பட்டியலில் வீரேந்தர் சேவாக் சாதனையை முறித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் 'நம்பர் 1 தொடக்க வீரர்' என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் செவாக், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்கி 400 இன்னிங்ஸ்களில் 16,119 ரன்கள் குவித்து இப்பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் நீடித்து வந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரின் போது 384 இன்னிங்ஸிலேயே சேவாக் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அரங்கில் 16,000 ரன்களைக் கடந்த 2வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி அதிக ரன்கள் குவித்துள்ள டாப் வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 16,137 ரன்களுடன் முதலிடத்திலும், வீரேந்தர் செவாக் 16,119 ரன்களுடனும் 2வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 15,335 ரன்களுடன் 3வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 12,258 ரன்களுடன் 4வது இடத்திலும், ஷிகர் தவன் 10,867 ரன்களுடன் 5வது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தது மட்டுமின்றி, உலக அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களின் ஒட்டுமொத்தப் பட்டியலிலும் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 19,298 ரன்களுடன் முதலிடத்திலும், கிறிஸ் கெய்ல் 18,867 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அரைசதம் கடந்த மிக வயதான இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோகித் சர்மா, தற்போது சேவாக்கின் ஆல்-டைம் ரெக்கார்டையும் காலி செய்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications