புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் குட்நியூஸ்
சென்னை: புதிய ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை இரண்டு, மூன்று வாரங்களில் தொடங்கி விடுவோம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். தவெக-வினர் எந்த பாகுபாடும் இன்றி எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதாகவும், சில பேர் சில காரணங்களுக்காக தவிர்க்கிறார்கள் எனவும் மேயர் பிரியா இந்நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் கூறினார்.
வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் வாங்கியதாக கூறுவது புனையப்பட்ட கதை என்றும், முதலமைச்சர் செயல் திட்டத்தை முடக்க வேண்டுமென இதுபோன்று கூறி வருகின்றனர் என அமைச்சர் வெங்கட்ரமணன் விளக்கம் அளித்தார்.

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில், புதிதாக கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்தார். அதன்பின் உடற்பயிற்சி கூடத்தில் அமைச்சர் உடற்பயிற்சி செய்தார். அதனை தொடர்ந்து அருகில் உள்ள நடுநிலை பள்ளி, சிறப்பு குழந்தைகளுக்கான விழுதுகள் மையத்தில் இருந்த குழந்தைகளுடன் சிரித்து விளையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணன் கூறும்போது, "சென்னை மாநகராட்சி முழுவதும் மக்களின் கருத்தைக் கேட்டு பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்துள்ளோம், பெண்கள் உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி மூலம் போதை கலாச்சாரத்தை ஒழிக்கப்படும், போதையில்லா வாழ்க்கையை உருவாக்க இது ஆரம்ப சூழ்நிலையாக உள்ளது . புதிய ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை இரண்டு, மூன்று வாரங்களில் தொடங்கி விடுவோம்.
கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம், இது மனசாட்சி உள்ள மக்களாட்சி என்றும், மக்களுக்காக அனைத்து செயல்பாடுகளையும் அனைத்து துறை சார்ந்து செய்து வருகிறோம் என்றார்.
இந்நிலையில் உடற்பயிற்சி கூடம் திறப்பு நிகழ்ச்சிக்கு மேயர் பிரியா கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழக அரசில் எந்த பாகுபாடும் இன்றி எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறோம் என்று கூறிய அமைச்சர், சில பேர் சில காரணங்களுக்காக தவிர்க்கிறார்கள் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்தார்.
அதேபோல் முதலமைச்சரின் செயல் திட்டத்தை முடக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் வாங்கி விட்டார்கள் என கூறுகிறார்கள் என்று கூறிய அமைச்சர், இவை அனைத்தும் புனையப்பட்ட கதை என்றும் தெரிவித்தார்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனிக்க வேண்டியவை
கடந்த மார்ச் முதல் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் காலம் காரணமாக விண்ணப்பங்கள் அப்படியே நிலுவையில் இருக்கும். அவற்றை தற்போது தவெக தலைமையிலான அரசு ஆய்வு செய்து வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், அந்தஸ்து வாரியாக கார்டுகளைப் பிரிப்பது போன்றவற்றை மேற்கொண்டுவருகிறது. இது வழக்கமான நடைமுறை தான்.
அதேபோல் தேர்தல் சமயத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு தற்போது அதிகாரிகள் சென்று சமையலறை ஆய்வு மற்றும் எல்.பி.ஜி சிலிண்டர் இணைப்பு விவரங்களைச் சரிபார்க்கும் கள ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல் புதிய கார்டுகளுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களைக் கூடுதலாகக் கொள்முதல் செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. எனவே திய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.














Click it and Unblock the Notifications