செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் தமிழக அரசு அதிரடி... பிற்பகலில் ஆஜராகும் அரசின் மூத்த வழக்கறிஞர்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இன்று காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், பிற்பகலுக்கு வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்று வழக்கை பிற்பகலுக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, சதித்திட்டம் தீட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின்பேரில்தான் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை.. தற்போது தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அசோக்குமார் முன்ஜாமீன் கோரி, ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட என்னுடைய பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இன்று காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், பிற்பகலுக்கு வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்று வழக்கை பிற்பகலுக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது














Click it and Unblock the Notifications