இது சும்மா டிரைலர் தான்.. ஐரோப்பாவை வறுக்கப் போகும் அடுத்த வெப்ப அலை! 'ஹூ' கொடுத்த வார்னிங்!
பாரீஸ்: ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாதத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட கடுமையான வெப்ப அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், மேலும் ஒரு புதிய வெப்ப அலை உருவாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில வாரங்கள் ஐரோப்பாவுக்கு மிகவும் ஆபத்தான காலமாக இருக்கலாம் என்றும், இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் 'ஹூ' வார்னிங் கொடுத்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உருவாகி வரும் புதிய வெப்ப அலை காரணமாக, போர்ச்சுகல் மற்றும் தெற்கு ஸ்பெயின் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவின் பல நாடுகள் 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலையை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து, 'ஹூ' ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்லூஜ், 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
ஐரோப்பா வெப்ப அலை
கடந்த வெப்ப அலைக்குப் பிறகு என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனை கையாண்டது எப்படி, அடுத்த வெப்ப அலையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆய்வின் போது வெப்ப அலைகளை சமாளிக்க முன்கூட்டியே 'Heat-Health Action Plan' எனப்படும் திட்டங்களை உருவாக்கியிருந்த நாடுகள், மக்களை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டதாக 'ஹூ' தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
ஆனால், ஹூ-வில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் குறைவான நாடுகளிடமே இத்தகைய திட்டங்கள் இருப்பது கவலை அளிப்பதாக ஹான்ஸ் க்லூஜ் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 20 முதல் 28 வரை ஏற்பட்ட வெப்ப அலை, ஐரோப்பா வரலாற்றில் பதிவான மிகக் கடுமையான வெப்ப அலைகளில் ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வெப்பம் காரணமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. பல நாடுகளில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.
கூடுதல் உயிரிழப்புகள்
இந்த கடுமையான வெப்ப நிலைக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த வெப்ப அலையின் போது சுமார் 3,700 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த எண்ணிக்கை ஆரம்பகட்ட ஆய்வின் போது கிடைத்தவை மட்டுமே என்றும், முழுமையான ஆய்வுகள் முடிவடைந்த பிறகு உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தில் முதியோர்கள்
அதே நேரத்தில், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், வீடற்றவர்கள் மற்றும் தனிமையில் வாழும் வயதானவர்கள் போன்றோருக்கு போதுமான பாதுகாப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று ஹூ கவலை தெரிவித்துள்ளது. இவர்கள் வெப்ப அலைகளின் போது மிக அதிக ஆபத்தில் இருப்பதால், அவர்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஹூ எச்சரிக்கை
"கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, அடுத்த வெப்ப அலையை எதிர்கொள்ள வேண்டும். அதோடு, வெப்ப அலை வந்த பிறகு மட்டும் செயல்படும் சுகாதார அமைப்பாக இல்லாமல், அதற்கு முன்பே தயாராக இருக்கும் சுகாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றும் ஹான்ஸ் க்லூஜ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆண்டுதோறும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் வெப்ப அலை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள நீண்டகால திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications