காவு வாங்கப்படும் சென்னை.. அடுத்தடுத்து முடங்கிய முக்கிய திட்டங்கள்
சென்னை: சென்னையின் எதிர்காலத்தை பெரிய அளவில் மாற்றும், சென்னையை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை 2.0 திட்டங்கள் பல பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னையின் தலையெழுத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் ஒரே மெட்ரோ சிட்டியும், இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார மையங்களில் ஒன்றுமான சென்னை மாநகரம், தற்போது கடுமையான பின்னடைவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
சென்னை கடுமையான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி ரீதியிலான சரிவை சந்தித்து வருவதாகப் பொருளாதார வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசின் சில முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள், சென்னையின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: பெரும் பின்னடைவு
சென்னையின் எதிர்கால வான்வழிப் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் ரூபாய் 27,000 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டிருந்த பரந்தூர் பசுமை வழி பன்னாட்டு விமான நிலையத் திட்டம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.

இருப்பினும், தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில், மாற்றுத் திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லாதது சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இது சென்னையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலங்கானாவுக்குத் திருப்பிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்சார் விவகாரம்
சென்னையின் மிக முக்கிய நீர்நிலையான பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 3,400 ஹெக்டேர் பரப்பளவிலான நிலப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியமானது என்றாலும், முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்றுத் திட்டங்கள் இல்லாததால், இந்த 3,400 ஹெக்டேர் நிலப்பரப்பைச் சுற்றியுள்ள பல வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதி உட்கட்டமைப்புகள் முழுமையாக முடங்கியுள்ளன. சமீபத்தில் பல முக்கிய திட்டங்கள் இங்கே முடக்கப்பட்டன.
நேற்று கூட ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர்கள் ஒன்றாக கூடி இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் தென் சென்னையின் ரியல் எஸ்டேட் மற்றும் வணிக நிறுவனங்களின் விரிவாக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது சென்னையின் முதலீடுகளை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
முடக்கப்பட்ட ஈசிஆர் மேம்பாலத் திட்டம்
சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட மேம்பாலத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்துத் திட்டமான மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகள் பல இடங்களில் மந்தமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நிறைவடைந்த வடபழனி - போரூர் வழித்தடங்கள் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்பது குறித்த உறுதியான அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்லது காலக்கெடு எதுவும் தற்போதைய அரசிடமிருந்து வெளியாகவில்லை.
இதனால் தினசரிப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
போஸ்டர் கலாச்சாரம்
சென்னை நகரம் தற்போது எங்கு நோக்கினும் அரசியல் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் கட்-அவுட்களால் நிறைந்து காணப்படுகிறது. இது சென்னையின் அழகைக் குலைப்பது மட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சென்னையின் அசுர வளர்ச்சியை சமாளிக்க தாம்பரம் மற்றும் ஆவடி போன்ற புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கான முழுமையான நிதி மற்றும் கட்டமைப்பு அதிகாரங்கள் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை. மேலும், சென்னைப் பெருநகர மாநகராட்சியின் எல்லையை விரிவாக்குவது அல்லது புதிய ஒருங்கிணைந்த மேலாண்மைக் கொள்கைகளை உருவாக்குவது போன்ற எந்தவொரு புதிய முன்னெடுப்புகளும் தற்போதைய விஜய் ஆட்சியில் காணப்படவில்லை.
இதனால் சென்னை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பின் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications