போதும்டா சாமி.. ஹோட்டல் முதல் மைதானம் வரை.. எகிப்து வீரர்களுக்கு நடந்த அநீதி.. ஃபிஃபாவின் பாரபட்சம்!
அட்லாண்டா: அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியில் எகிப்து அணி ஏமாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நடுவர்கள் மற்றும் விஏஆர் அர்ஜெண்டினா அணிக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டதாகவும், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவுக்கு ஆதரவாக ஃபிஃபா செயல்படுவதாகவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியில் எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி 2-0 என்று முன்னிலை பெற்றிருந்த சூழலில், கடைசி நிமிடங்களில் ஆட்டத்தின் ஒட்டுமொத்த போக்கையும் அர்ஜெண்டினா அணி மாற்றிவிட்டது.

இந்த தோல்விக்கு பின் எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹசன் பேசுகையில், நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதுவும் விஏஆர் மூலமாக சரிபார்க்கப்படவில்லை. எங்கள் அணியின் 2வது கோலும் நடுவரால் ரத்து செய்யப்பட்டது.
ஒருவேளை நடப்பு உலக சாம்பியனை போட்டியில் தக்க வைக்கவோ அல்லது மெஸ்ஸி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு இருந்தே எகிப்து அணிக்கு ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்தன. ஹோட்டலில் இருந்து போட்டிக்கு கிளம்பும் போது எகிப்து வீரர் ஒரு சிறுவனுடன் செல்ஃபி எடுத்தார்.
அப்போது அங்கிருந்த காவல் அதிகாரி தடுக்க, பயிற்சியாளர் ஹசன் உடனடியாக மோதலில் ஈடுபட்டார். அதேபோல் களத்தில் நடுவர்கள் ஒரு சார்பாக இயங்கியது வெளிப்படையாகவே தெரிந்தது. எகிப்து 1-0 என முன்னிலையில் இருந்தபோது, 60வது நிமிடத்தில் முஸ்தபா ஸிகோ ஒரு கோல் அடித்தார். இதனை எகிப்து வீரர்கள் கொண்டாடிய போது, VAR தலையிட்டு அந்த கோலை ரத்து செய்தது.
எகிப்து அணி தனது பகுதியில் இருந்து அட்டாக்கை தொடங்குவதற்கு முன்பாக, எகிப்து வீரர் மரவான் அத்தியா, அர்ஜெண்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் மீது ஃபவுல் செய்ததாக விஏஆர் காட்டியது. ஆனால், இந்த ஃபவுல் மைதானத்தின் மறுஎல்லையான 75-100 யார்டுக்கு முன்பு நடந்தது. அதன் பின் பல பாஸ் செய்யப்பட்டு கோல் அடிக்கப்பட்டது.
இவ்வளவு தூரத்திற்கு முந்தைய நிகழ்வை விஏஆர் கையில் எடுத்தது எகிப்து தரப்பை கொந்தளிக்கச் செய்தது. அதேபோல் 2ம் பாதியின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் பாக்ஸ் உள்ளே எகிப்து வீரர் ஹம்டி ஃபாத்தியின் சட்டையை அர்ஜென்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் பின்னால் இருந்து இழுத்து கீழே தள்ளினார். வழக்கமான விதிகளின்படி, எகிப்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் நடுவர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இன்னொரு பக்கம் விஏஆர் தொழில்நுட்பம் மூலம் சோதிக்கவும் பரிந்துரைக்கவில்லை. கோல்கீப்பர் முஸ்தபா ஷோபீர், ஹம்டி ஃபாத்தி, மரவான் அத்தியா என அடுத்தடுத்து எகிப்து வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. நடுவரிடம் நியாயம் கேட்கச் சென்ற பயிற்சியாளர் ஹசனுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.
அதுமட்டுமல்லாமல் எகிப்து வீரர்கள் செய்த அதே தவறுகளை அர்ஜெண்டினா வீரர்கள் செய்தபோது நடுவர் அதற்கு மஞ்சள் அட்டை கூட கொடுக்கவில்லை. இதனை எகிப்து அணியின் கேப்டன் முகமது சாலா மைதானத்திலேயே அதிருப்தி தெரிவித்தார். குறிப்பாக எகிப்து வீரர் இமாம் முகத்தில் குத்தப்பட்டும் நடுவர் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் பில்லியன் டாலர் ஊழல் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications