6 நாடுகள், 50+ இடங்கள்.. FBI நடத்திய மெகா ஆபரேஷன்.. லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கிற்கு எதிராக ஸ்கெட்ச்?
வாஷிங்டன்: சர்வதேச அளவில் இயங்கி வந்த மிக பெரிய க்ரைம் நெட்வொர்க்கை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ காலி செய்துள்ளது. ஒரே நேரத்தில் 6 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷனில் 24 கொடூர குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், பல ஆயிரம் கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவரைக் கடந்த 2023 ஜூன் 18ம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருநானக் குருத்வாரா அருகே சில மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலை சர்வதேச அளவில் மிக பெரியளவில் எதிரொலித்தது. இந்த படுகொலைக்கு யார் காரணம் என்பதில் தெளிவற்ற சூழலே இருந்தது.

அதிரடி ஆபரேஷன்
இது தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த சர்வதேச விசாரணையின் முடிவில், சிறையில் உள்ள பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான சதீந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிரார் ஆகியோர் இணைந்தே இந்த படுகொலைக்கு உத்தரவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
"ஆபரேஷன் ஹார்ட் பால் " என்ற பெயரில் நடத்தப்பட்ட சர்வதேச குற்ற ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த திடுக் தகவல்களை அமெரிக்க எஃப்.பி.ஐ கண்டறிந்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விசாரணை அமைப்புகள் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய நிலையில், இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
6 நாடுகள்
இந்த விசாரணையின் அடிப்படையில் அமெரிக்கா, கனடா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா, இந்தியானா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களிலும், கனடா மற்றும் ஸ்பெயினிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 37 பேர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 பேர் தலைமறைவாக உள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த மூன்று குற்றப்பத்திரிகைகளில் ஒன்றில் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் முக்கிய குற்றவாளிகளாக இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் சிறையில் இருந்தாலும் கூட சட்டவிரோதமாக செல்போன்கள் மற்றும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி பிஷ்னோய் தனது சர்வதேச க்ரைம் கும்பலை இயக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஹர்தீப் சிங் படுகொலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் வட அமெரிக்காவில் பிஷ்னோய் கும்பலை வழிநடத்தும் கோல்டி பிரார் ஆகியோர் உத்தரவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல ஐரோப்பாவில் இந்த கேங்கின் செயல்பாடுகளை ரோஹித் கோதாரா ஒருங்கிணைத்ததாகவும், இந்த கும்பல் அரசியல் கொலைகள், ஆள் கடத்தல், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
திடுக் தகவல்கள்
இது மட்டுமின்றி, வம்சாவளியினரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிப்பது, போதை பொருளை அமெரிக்கா-கனடா எல்லை வழியாக கடத்துவது ஆகிய குற்ற செயல்களிலும் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிரடி ஆபரேஷனில் லாரன்ஸ் பிஷ்னோய் கேங் மட்டுமல்லாமல், ஜக்கு பகவான்புரியா கேங் மற்றும் கனடாவை சேர்ந்த ரவீந்தர் சிங் தந்தா தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அதிரடி சோதனைகளில் சுமார் 1,000 கிலோ கோகைன், ஒரு கிலோ ஹெராயின், 12 துப்பாக்கிகள் மற்றும் 40,000 அமெரிக்க டாலர் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ பகுதியில் மட்டும் 23 இடங்களிலும், லாஸ் ஏஞ்சல்ஸில் 11 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.














Click it and Unblock the Notifications