தோண்ட தோண்ட தாய்லாந்து மண்ணில் அதிர்ஷ்டம்! உலக நாடுகளை வியக்க வைத்த தமிழரின் தங்க மோதிரம்
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு அகழாய்வு நடந்து வருகிறது. அங்கு மொத்த உலக தமிழர்களையும் பெருமையிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், பழந்தமிழர்களின் "தமிழி" எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது... இதை பற்றிதான் சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. பழந்தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்ததையும், அவர்களின் நாகரிகம் எந்தளவுக்கு பரவியிருந்தது என்பதையும் இந்த தொல்லியல் கண்டுபிடிப்பு மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ளது டான்யாய் தாங் என்ற பகுதி.. இங்கு தொல்லியல் துறையினர் தீவிரமாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தாய்லாந்தில் தங்க மோதிரம்
அப்போது அங்கு பழமையான ஒரு புதைவிடம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த புதைவிடத்தை முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தபோது, அங்கு வடகிழக்கு திசையில் தலை வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து அந்தப் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.
அதில் ஒரு தங்க மோதிரமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. அந்த மோதிரத்தை உற்று பார்த்தால், அதில் பிராமி எழுத்துக்கள் வடிவில் ஏதோ பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
எனவே இந்த மோதிரத்தை உடனடியாக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.. அதில் "புசரக்ஷிடச" என்று எழுதப்பட்டிருப்பதாக படித்தனர். அதாவது இதற்கு "பூச நட்சத்திரத்தால் காக்கப்பட்டவர்" என்பது அர்த்தமாம்..
கண்ணாடியில் எழுத்துக்கள்
ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த "சார்" என்ற தொல்லியல் வரலாற்று தேடல் குழுவின் நிறுவனரும், மதுரையைச் சேர்ந்தவருமான ரஞ்சித் குமார் இந்த எழுத்துக்களின் உண்மையான பின்னணியை கண்டறிந்து மாற்றி அமைத்துள்ளார். இந்த மோதிரத்தில் இருப்பது வடமொழி எழுத்துக்கள் கிடையாது என்றும், அவை இடவலமாக மாற்றி எழுதப்பட்ட பழந்தமிழ் எழுத்துக்கள் அதாவது தமிழி என்றும் ஆதாரத்துடன் கூறுகிறார்.
இதுகுறித்து ரஞ்சித் குமார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, பழந்தமிழர்களின் முத்திரை மோதிரங்கள் இதற்கு முன்பும் தமிழகத்தில் நடந்த பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. பொதுவாக கண்ணாடியில் பார்த்தால் நேராகவும், நேரடியாக பார்த்தால் இடவல மாற்றத்துடனும் (தலைகீழாக) இருக்கும் வகையில், தங்களின் முத்திரையையோ அல்லது பெயரையோ மோதிரத்தில் பொறித்து அணியும் வழக்கம் பழந்தமிழர்களிடம் இருந்தது.
மோதிரம் - தனித்துவம்
இந்த மோதிரத்தை தேன் மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அழுத்த பயன்படுத்தும்போது, அதில் நேரான முத்திரையோ, எழுத்தோ பதிந்துவிடும். அந்தக்காலத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் மட்டுமே இதுபோன்ற தனித்துவமான முத்திரை மோதிரங்களை அணிந்திருந்தனர். இப்போது தாய்லாந்தில் கிடைத்துள்ள மோதிரத்திலும் அதேபோல இடவல மாற்றத்துடன்தான் "அளர் வைரதன்" என்ற தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த பிரபல தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறும்போது, "ரஞ்சித் குமார் இந்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்களை இடவல மாற்றம் செய்து (நேராக மாற்றி) எனக்கு ஆய்விற்காக அனுப்பியிருந்தார். அதை நான் பார்த்தபோது, அது நிச்சயமாக "தமிழி" எழுத்துக்கள் தான் என்பதை மிக உறுதியாகச் சொல்ல முடிகிறது.
தாய்லாந்து மண்ணில் தமிழ் பெயர்
இதில் வரும் 'அளர்' என்ற தமிழ் சொல்லுக்கு நீர், மஞ்சள், உவர் என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளன. அதாவது, வளமான நஞ்சை நிலம் அல்லது மருத நிலத் திணையைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகரின் பெயர் தான் அது என்று பொருள் கொள்ளலாம். தாய்லாந்தில் கிடைத்துள்ள மற்ற தொல்பொருட்களையும் இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால், தமிழர்களின் இந்த வரலாற்றுத் தொடர்பை முழுமையாக உறுதி செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார்..
தாய்லாந்து மண்ணில் தமிழ் பெயர் பொறித்த தங்க மோதிரம் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது...!!!












Click it and Unblock the Notifications