பழத்தோட்டத்தில் பதுங்கல்.. இந்தியாவை மிரட்டிய எல்இடி பயங்கரவாத கமாண்டரை காலி செய்த ராணுவம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் உள்பட இந்தியாவுக்கே மிரட்டலாக இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் 'டாப் கமாண்டர்' ஜாகீர் கனாய் இன்று ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் அவன் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்னொரு பயங்கரவாதியை வேட்டையாடும் வகையில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ராணுவம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள அடர் பழத்தோட்டத்திற்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 3ம் தேதி கண்காணிப்பு கேமராவில் 2 பயங்கரவாதிகளின் உருவங்கள் பதிவாகின. இதன்மூலம் பயங்கரவாதிகள் பழத்தோட்டத்திற்குள் பதுங்கி இருப்பது உறுதியானது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களின் பெயர்கள் ஜாகீர் கனாய் மற்றும் லத்தீப் பாட் என்பது தெரியவந்தது. இதில் ஜாகீர் கனாய் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் 'டாப்' கமாண்டர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. மேலும் ஜாகீர் கனாய் நம் நாட்டின் ஏ++ கேட்டகிரியைச் சேர்ந்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவிற்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதால் அவர்களை பிடிக்க இன்று 5வது நாளாக தேடுதல் பணி நடந்து வருகிறது. இன்று காலையில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவம் - போலீஸ்காரர்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஜாகீர் கனாய் சுட்டு கொல்லப்பட்டான். அவனது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளையில் லத்தீப் பாட் தப்பினான். அவனை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது தேடுதல் வேட்டை நடத்தப்படும் இடம் என்பது பெரிய பழத்தோட்டம் மட்டுமின்றி 7 கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இதுதான் பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் தற்போது அந்த பழத்தோட்டம் மட்டுமின்றி கிராமங்களை விட்டு வெளியேறும் அனைத்து இடங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில பயங்கரவாதி லத்தீப் பாட் சிக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications