குதிரை பேரம் நடந்ததா? விஜய்யிடம் கேட்கும் ஆளுநர் அர்லேகர்! இன்றே பாய்கிறது நோட்டீஸ்? கிடுக்கிப்பிடி
சென்னை: முதல்வர் விஜய்யிடம் குதிரை பேரம் தொடர்பாக ஆளுநர் அர்லேகர் இன்றே கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராகக் கிளம்பியுள்ள குதிரை பேரம் புகார்கள் குறித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 167-ன் கீழ் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்றே விளக்கம் கேட்க வாய்ப்புள்ளதாக ராஜ் பவன் மற்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளன.

ஆளுநர் எடுக்க போகும் ஆக்சன்
அதிமுகவின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அணிவகுத்து கட்சி தாவியதும் தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இதை குதிரை பேரம் என்று அதிமுக, திமுக கடுமையாக விமர்சனங்களை வைக்கிறது.
அதிமுகவில் இருந்து வரிசையாக மூத்த தலைவர்கள் பலர் தவெக தாவுவது அதிகரித்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.
ஆளுநர் பயணம்
டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள ஆளுநர் அர்லேகர், இந்த விவகாரத்தில் தாமதிக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகியவை அடுத்தடுத்து அளித்த புகார்களின் அடிப்படையில், தவெக அரசிடம் முறையான விளக்கத்தைக் கோர ஆளுநர் மாளிகை சட்டக் குறிப்புகளைத் தயார் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாய்ந்த புகார்கள்
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக, அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகியன குதிரை பேரம், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைப் பல்வேறு ஆசை வார்த்தைகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் தவெக அரசு தங்கள் கட்சிக்குள் இழுத்துள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலை குறித்து ஆளுநர் மௌனம் காக்கக் கூடாது, உடனடியாக சட்டப்பிரிவு 167-ன் கீழ் அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
இதேபோல் திமுக தரப்பிலிருந்து ஆர்.எஸ். பாரதி தலைமையிலான குழுவும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்துத் தங்களின் புகார்களைப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், தற்போது தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்கத் தயாராகி வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஏன் இந்த அதிரடி?
சட்டப்பிரிவு 167ன் படி, மாநிலத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்து முதலமைச்சருக்கு உத்தரவிட்டுத் தகவல்களைப் பெறும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் தொடர் ராஜினாமா மற்றும் கட்சித் தாவல்களின் பின்னணி என்ன? இதில் ஏதேனும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதா? என்பது குறித்து ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்ப உள்ளதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே இந்த தொகுதிகளுக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.















Click it and Unblock the Notifications