பெங்களூர் போக்குவரத்தை முடக்கிய நல்ல பாம்பு.. இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கலை
பெங்களூர்: பெங்களூர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற நகராக உள்ளது. இப்படியான சூழலில் தான் நேற்றைய தினம் நல்லப்பாம்பு (நாகபாம்பு) ஒன்று சாலையின் நடுவே படமெடுத்தபடி அப்படியே நின்றதால் சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த இடம் என்பது பெங்களூர் அரண்மனை ரோடாகும். இது பெங்களூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய ரோடாகும். தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும். இந்நிலையில் தான் நேற்று மாலையில் பெங்களூர் அரண்மனை ரோட்டில் அழையா விருந்தாளியாக வந்தது நாகப்பாம்பு.
இந்த நாகபாம்பு சாலையின் மையப்பகுதியில் வந்து சீறியபடி நின்றது. பாம்பின் உடல் சாலையில் கிடக்க தலை மட்டும் நேராக தூக்கி வாகன ஓட்டிகளை நோக்கி சீறியபடி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பயந்துபோயினர். அரண்மனை சாலையின் ஒரு பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மீதமுள்ள ஒரு சாலையை மட்டும் பயன்படுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் அங்கு சென்று பாம்பை அங்கிருந்து விரட்டிவிட முயன்றனர். ஆனால் பாம்பு சாலையை விட்டு நகரவே இல்லை. இதனால் சுமார் 30 - 40 நிமிடங்கள் வரை அரண்மனை சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. அதன்பிறகு கூடுதல் போலீசார் வந்து பாம்பை அங்கிருநது பிடித்த அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே தான் சாலையின் நடுவே பாம்பு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வேடிக்கையாக கருத்துகளை கூறி வருகின்றனர்.
இதுபற்றி ஒருவர், ''அரண்மனை சாலையில் நாகப்பாம்பு இருந்ததால் நேற்று பெங்களூர் போக்குவரத்து நெரிசல் புதிய விஐபியை கண்டது'' என கூறியுள்ளார். அதேபோல் இன்னொருவர், ''பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பற்றி கவலைப்படாமல் இந்த பாம்பு சுமார் 30 நிமிடம் மாலை நேர தியானத்தை நடுரோட்டில் மேற்கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார். மற்றொருவரோ,''பெங்களூரில் பிஎம்டபிள்யூ உள்பட எந்த காரும் இன்றி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த இந்த பாம்பால் மட்டுமே முடிகிறது'' என கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications