இரண்டு பக்கமும் துண்டு போடுகிறாரா திருமாவளவன்? விஜய்யின் முதுகில் குத்திய விசிக.. இதுதான் பின்னணி?
சென்னை: தவெக அமைச்சர்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கின்றன. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தன் துறைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பள்ளிக்கு சென்று, அங்கிருந்த குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசி, அதனை ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். அவரே முறையாக ஆங்கிலம் பேசத் தெரியாதவர் என்கிறபோது, இந்த வீண் விளம்பரம் தேவையா? என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
The Gentle Man என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "தமிழக அரசியல் களத்தில் விசிக தலைவர் அண்ணன் தொல். திருமாவளவனின் தற்போதைய செயல்பாடுகள் பெரும் வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. எப்போதும் தெளிவான பார்வையோடும் நேர்த்தியான பேச்சோடும் அரசியல் செய்யக்கூடிய அவர், சமீபகாலமாக நடிகர் கமலஹாசன் பாணியில் முன்னுக்குப் பின் முரணாக, பேச தொடங்கியுள்ளார். இதை பொதுமக்கள் மட்டுமன்றி, சோஷியல் மீடியாவிலும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இப்போதைய தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்துள்ளது. வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள விசிகவிற்கு, தவெக தலைவர் விஜய் தாராள மனப்பான்மையோடு அமைச்சரவையில் இடமும் கொடுத்துள்ளார்.
திருமாவளவன் - தவெக விஜய்
கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய 2 பெரிய கட்சிகளின் ஆட்சிகளிலும் கூட விசிகவிற்கு அமைச்சர் பதவி என்பது எட்டாக்கனவாகவே இருந்தது. அந்த நீண்ட காலக் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார். ஆனால், அந்தப் பெருந்தன்மைக்குத் திருமாவளவன் அளிக்கும் பதில் என்னவாக இருக்கிறது? அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு, அதே நேரத்தில் "நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை" என்று அவர் சொல்வது எந்த வகையான அரசியல் நாகரிகம்?
இடதுசாரி கொள்கைகளை பின்பற்றித்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொல்கிறார்.. அப்படியானால் தவெக அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு தந்து, அமைச்சர் பதவியை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல விசிகவும் பதவியைத் தவிர்த்திருக்க வேண்டும்.
திமுகவுடன் நட்பு
அப்படி செய்யாமல், அதிகாரத்தையும் பதவியையும் அனுபவித்துக்கொண்டு, "தவெகவோடு கூட்டணி இல்லை, ஆனால் திமுகவோடு நட்பு தொடர்கிறது" என்று பேசுவது விஜய்யின் முதுகில் குத்தும் துரோகச் செயலாகும். இவர்களின் இந்த முரண்பாடான நிலைப்பாடு, தாலிகட்டாமல் குடும்பம் நடத்திவிட்டு, தாம்பத்திய உறவிலும் இருந்துவிட்டு, சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்யவில்லை என்று சொல்வதை போன்ற ஒரு மோசடி அரசியலாகும்.
காங்கிரஸ் தரப்பிலிருந்து மாணிக் தாகூர் கூட, இது போன்ற வார்த்தை விளையாட்டுகளை விசிக நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார். தவெக அரசை திமுகவினர் "சோபா கூட்டணி", "கல்லாப்பட்டி கூட்டணி" என்றெல்லாம் கடுமையாகக் கிண்டல் செய்த பிறகும், திருமாவளவன் இன்னும் திமுகவிடம் நட்பு பாராட்டுவது அசிங்கமானது.
கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா
ஒருவேளை திமுக ஆட்சியில் இருந்தபோது விசிக இதேபோல தவெகவோடு நட்பு பாராட்டினால் கலைஞர் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ இதனை சகித்துக் கொண்டிருப்பார்களா? விஜய் புதியவர் என்பதால் இவ்வளவு அலட்சியமா? திருமாவளவன் ரொம்ப தெளிவாகக் குழப்புகிறார், அவருக்கு நல்ல மருத்துவச் சிகிச்சை தேவை என்றே தோன்றுகிறது.
மறுபுறம், தவெக அமைச்சர்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கின்றன. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தன் துறைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பள்ளிக்கு சென்று, அங்கிருந்த குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசி, அதனை ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். அவரே முறையாக ஆங்கிலம் பேசத் தெரியாதவர் என்கிறபோது, இந்த வீண் விளம்பரம் தேவையா?
அமைச்சர் கீர்த்தனா
பொழுது விடிந்தால் அமைச்சர்கள் என்ன பஞ்சாயத்தைக் கொண்டு வருவார்களோ என்று முந்தைய ஆட்சியில் ஸ்டாலின் கவலைப்பட்டது போல, இப்போது விஜய்க்கும் சில அமைச்சர்கள் சங்கடத்தை உருவாக்குகிறார்கள். முதலமைச்சர் விஜய் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் கண்ணியமாகவே உள்ளார்.
சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் குடும்பத்தைப் பேசி வம்புக்கு இழுத்தபோது கூட நாம் கண்டித்தோம். அதனால் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் மட்டும் கவனம் செலுத்தி, மற்ற அமைச்சர்களின் அட்ராசிட்டிகளுக்குப் பேட்டி அளித்து அரசுக்கு அவப்பெயரை உண்டாக்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications