ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60%ல் இருந்து 50% ஆக குறைக்கக் கோரிய வழக்கில் அரசின் முடிவை வரும் 24 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டு, நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 92,412 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 31,923 பேரும் எழுதினர்.

தேர்வு நடந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் நிலையில் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பொதுப்பிரிவினர் 60% (150க்கு 90) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (150க்கு 82) மதிப்பெண்களும் பெறவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி மதிப்பெண் 50% ஆகவும் அறிவிக்கப்பட்டது
பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவிதமாக குறைக்கக் கோரி 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவர்களது மனுவில் பீகார் மாநிலத்தில் 50 சதவீதமாக குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணபிக்க பொதுப் பிரிவு ஆசிரியர்களுக்கு 50 சதவீத மதிபெண்கள் மட்டுமே நிர்ணயித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 08) நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளது. இதனால் அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, "அரசின் முடிவை வரும் ஜூலை 24 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது" எனக் கூறி இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications